காந்திக்கும், கறிக்கும் என்ன சம்பந்தம்... கடையைத் திறந்து மூடாமல் தகராறு செய்தவர் கைது!
பவானி: பவானியில் காந்தி ஜெயந்தியன்று தடையை மீறி கறிக் கடையைத் திறந்து வைத்திருந்தவர் அதை மூடுமாறு நகராட்சி ஊழியர்கள் கூறியபோது அவர்களை திட்டி தகராறு செய்ததால் கைது செய்யப்பட்டார்.
காந்தி ஜெயந்தி அக்டோபர் 2ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாமிச விற்பனை, மது பான விற்பனை போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. நேற்றும் நாடு முழுவதும் காந்தியடிகளின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில், பவானி நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில், துப்புரவு பணியாளர்கள், பழைய பஸ் ஸ்டாண்ட், மீன் மார்க்கெட், அந்தியூர் ரோடு, பழைய பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் சோதனை நடத்தினர்.
அப்போது, மேட்டூர் மெயின் ரோட்டில் பழனிச்சாமி என்பவர் தனது கறிக்கடையைத் திறந்து வைத்து வியாபாரம் செய்து வந்தார். இதைப் பார்த்த நகராட்சி ஊழியர்கள், இன்று கடை திறக்கக் கூடாது, மூடுங்கள் என்று கூறியுள்ளனர்.
ஆனால் கடையை மூட மறுத்த பழனிச்சாமி, அவர்களைத் திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில், பவானி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பழனிச்சாமியை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications