என்னுடைய ராஜதந்திரமே திமுகவின் தோல்விக்குக் காரணம்: வைகோ
சென்னை: என்னுடைய ராஜதந்திரத்தினால்தான் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக உடன் தேமுதிக இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி சென்றிருந்தால் நிச்சயம் திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும். திமுக பக்கம் தேமுதிகவை செல்ல விடாமல் தடுத்தது வைகோதான் பேசப்பட்டது.
மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிகவை இணைத்து தனியாக தேர்தலை சந்தித்தால் நிச்சயம் அதிமுகவே வெல்லும் என்று பலராலும் கணிக்கப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வருவதற்கே வைகோ முயற்சி செய்கிறார். இதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் அதிமுக தலைமையிடம் இருந்து வாங்கிவிட்டார் என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டை மருத்து வந்த வைகோ, திருச்சியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய போது, தன்னுடைய ராஜதந்திரத்தினால்தான் திமுக ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்று தெரிவித்துள்ளார்.
செயல்வீரர்கள் கூட்டம்
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வாளாடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் மதுக்கடைகளை முழுமையாக மூடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், விவசாய கடன் தள்ளுபடியை, அறிவித்தபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மக்களுக்கான இயக்கம்
வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தேர்தலில் வெற்றி தோல்விகள் வரலாம், போகலாம். ஆனால், ஆட்சி அதிகாரம் பதவிகள் எதுவும் இல்லாத போதும் மக்களுக்காக பாடுபடுகிற ஒரே இயக்கம் மதிமுக மட்டும்தான் என்றார்.
ராஜதந்திரி
என்னை ராஜதந்திரம் இல்லாதவர் என கருணாநிதி நினைத்து கொண்டிருந்தார். ஆனால், எனது ராஜ தந்திரத்தால்தான், ஆட்சி அமைக்க வேண்டிய வாய்ப்புகள் இருந்தும்கூட திமுக ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை மறுக்க முடியாது.
கைவிட மாட்டேன்
இந்த நிமிடம் வரை நமது இயக்கத்தை அழிக்க நினைத்து நிர்வாகிகளை இழுத்து வருகின்றார்கள். நம்மை அழிக்க நினைத்தார்கள், அவர்கள் அழிந்து போய்விட்டார்கள். எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள், உங்களுக்காக நான் இருக்கிறேன். இதுதான் நமது இயக்கத்தின் பிணைப்பு. நான் எப்போதும் கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களை கைவிடமாட்டேன்
விலைபோகாத இயக்கம்
தமிழக மக்கள் எங்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி, ஆட்சி அதிகாரம், பதவிகளை வழங்கினால், இதைவிட 100 மடங்கு மக்களுக்காக பாடுபடுவோம். தேர்தல் அரசியலில் மட்டுமல்லாமல் மக்கள் போராட்டங்கள் என பலவற்றில் இதுவரை விலைபோகாத இயக்கம் தமிழகத்தில் உள்ளது என்றால் அது மதிமுக மட்டும்தான் என்றும் கூறினார் வைகோ.
வெற்றிக்காக காத்திருப்போம்
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நாம் பாடுபடுவோம். வெற்றி கிடைக்காவிட்டாலும் காத்திருப்போம். உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பணத்திற்கு அடிபணிய மாட்டார்கள். சேவை செய்பவர்களை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து எந்தெந்த பதவிகளில் போட்டியிடுவதும் என முடிவு செய்யப்படும் என்றும் வைகோ கூறியுள்ளார்.