அதிசயங்கள் நிறைந்த பழனி முருகன் சிலை... ஆகம விதிகளை மீறியதால் யாருக்கு ஆபத்து?
அதிசயங்கள் நிறைந்த பழனி மலைக்கோவில் நவபாஷாண மூலவர் சிலையை மறைத்து புதிதாக அபிஷேக மூர்த்தி சிலை வைக்கப்பட்டதே ஜெயலலிதாவின் தொடர் தோல்விக்கு காரணம் என்று சர்ச்சை எழுந்தது.
Recommended Video

சென்னை: அதிசயங்களும், அற்புதங்களும் கொண்ட பழனி தண்டாயுதபாணி நவபாஷாண சிலையை மறைத்து அபிஷேக மூர்த்தி சிலை வைத்த பின்னர் நடந்த சர்ச்சைகளும், ஆட்சியாளர்களுக்கு நேர்ந்த சங்கடங்களும் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன.
கடந்த 2004ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி பழநி மலைக்கோயிலில் நவபாஷாண மூலவர் சிலை இருக்கும் கருவறையில் ஜெயேந்திரர் தலைமையில், மூலவரை மறைத்து அதே உயரத்துக்கு 100 கிலோ எடையில் ஐம்பொன் சிலையை ஆகம விதிகளை மீறி, இரவோடு இரவாக யாரும் அறியாவண்ணம் வைத்தனர்.

அதிகாலையில் இதுகுறித்து அறிந்த மக்கள், மிகப்பெரிய போராட்டம் நடத்தியும் அப்போதய ஜெயலலிதா அரசு கண்டு கொள்ளவில்லை. கருவறையில் ஒரு மூலவர், ஒரு உற்சவர்தான் இருக்க வேண்டும். ஆனால், பழநி கருவறையில் 3 சிலைகள் இருந்ததால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரிவித்தனர். அதை யாரும் கண்டு கொள்ளவில்லை.
அதே ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. இதனையடுத்து ஜூன் மாதமே ஹோமங்கள், சிறப்பு யாகங்கள் நடத்தி அந்த சிலையை அப்புறப்படுத்தினர்.
இந்த சிலை வைப்பதற்கு ஐடியா கொடுத்தாக சொல்லப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொலை வழக்கில் சிக்கி சிறை சென்றனர். 2006ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா தோல்வியை தழுவினார்.
தண்டாயுதபாணி சிலையில் இருந்து எந்தப் பொருள் ரசாயன மாற்றத்தைத் தருகின்றது என்பதை நவீனக் கருவியினால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்ற உண்மையை ஒரு விஞ்ஞானி வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், பழநி மலைக் கோயிலில் பாரவேல் மண்டபம் அருகே வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள பூட்டிய அறையில், யாராலும் கண்டுகொள்ளப்படாமல் 10 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்தது.
2014ஆம் ஆண்டுவரை மலைக் கோயிலில் டபுள் லாக்கர் பாதுகாப்பு பெட்டகத்தில் பூட்டிய அறையில் வைத்தனர். பூட்டிய அறையில் சிலையை வைக்கக் கூடாது. அது தெய்வ குற்றம் என்று கூறியதை கேட்டு 2014ஆம் ஆண்டு அந்த சிலை வெளியே எடுக்கப்பட்டு பூட்டிய அறைக்குள் ராஜ அலங்காரம் செய்து நெய்வேத்தியம் செய்யப்பட்டது.
பூட்டிய அறையில் சாமி சிலைக்குபூஜை செய்வது ஆட்சியாளர்களுக்கு ஆபத்து என்றும் கூறப்பட்டது.
பக்தர்கள் வந்து செல்லக்கூடிய இடத்தில் பூட்டிய அறையில் சிலையை வைக்கவும் கூடாது, யாருக்கும் தெரியாமல் அந்த சிலைக்கு பூஜை செய்வது அதைவிட பெரிய தெய்வ குற்றம் என்று கூறப்பட்டது. சொன்னது போலவே அதே ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார் ஜெயலலிதா.
2014 அக்டோபர் மாதம் சிறையில் இருந்து திரும்பினாலும் 2015ஆம் ஆண்டு மே மாதம் வழக்கில் இருந்து விடுதலை பெற்று முதல்வரானார். 2016ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தும் அவரால் நீண்ட காலம் முதல்வராக நீடிக்க முடியாமல் போனது. உடல் நலம் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்து பலனின்றி காலமானார்.
ஆகம விதிகளை மீறி அபிஷேக மூர்த்தி சிலை செய்து அதிலும் தங்கத்தை கையாடல் செய்த குற்றத்திற்காக தற்போது கைதாகி சிறையில் உள்ளார் முத்தையா ஸ்தபதி. பஞ்சலோக சிலை 200 கிலோவுக்கு பதில் 221 கிலோ எடையில் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முறைகோடாக சிலை செய்த குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க கருத்துப்போன அந்த சிலையில் இருட்டறையில் கடந்த 14 ஆண்டுகளாக பூட்டி வைத்ததோடு அதற்கு செலவு கணக்கும் முறைகேடாக எழுதினர். இதனை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமால் கண்டறியப்பட்டது.
அந்த சிலையை பரிசோதித்த தொழில்நுட்பக்குழுவினர் 22 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட சிலையில் 10 சதவீதம் கூட தங்கம் இல்லை எனவும், ஐம்பொன்னால் சிலை செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சிலையை செய்த பத்மஸ்ரீ விருது பெற்ற தலைமை ஸ்தபதி முத்தையா, கோயிலின் முன்னாள் செயல் அலுவலர் கே.கே.ராஜா ஆகியோர் கைது செய்த காவல்துறையினர் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications