“சதுரங்க வேட்டை..” நாம் தமிழர் ஊழல் ஒழிப்பு பிரிவு நிர்வாகியின் ஊழல்! அதிர்ந்த சீர்காழி - உடனே கைது
பொதுமக்களிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த நாம் தமிழர் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு பாசறை மாவட்ட செயலாளர் செண்பகசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை: இலவச வீட்டுமனைப் பட்டா வாங்கித் தருவதாக கூறி 40 க்கும் மேற்பட்ட மக்களிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக நாம் தமிழர் கட்சியின் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு பாசறை மாவட்ட செயலாளர் செண்பகசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். ஊழல் ஒழிப்பு பாசறை நிர்வாகியே ஊழல் செய்யலாமா என பலர் விமர்சித்து வருகிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்து அமைந்து இருக்கிறது பழையார் மீனவ கிராமம். கடந்த 2006 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்த மீனவ கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா அரசால் வழங்கப்பட்டது.
இந்த நிலங்கள் அல்லாமல் காலியாக உள்ள நிலங்களுக்கும் வீட்டு மனைப் பட்டா வாங்கித் தருவதாக கூறி இருக்கிறார் அப்பகுதியை சேர்ந்த செண்பகசாமி என்ற நபர். இதை அப்பகுதி மக்களும் நம்பி உள்ளார்கள்.

ரூ.8 லட்சம் வசூல்
இதனை கூறியே அப்பகுதி மக்கள், மீனவ பெண்கள் என சுமார் 40 பேரிடம் நபருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை அவர் வசூலித்து இருக்கிறார். இப்படி மொத்தம் 8 லட்சம் ரூபாய் வசூலித்த செண்பகசாமி, பணம் கொடுத்த மக்களுக்கு பட்டா ஆவணத்தையும் கொடுத்து இருக்கிறார். இதற்கிடையே காலியாக உள்ள இடங்களுக்கு பட்டா கேட்டு கிராம மக்கள் ஊர் பெரியவர்களிடம் கோரிக்கை வைத்து உள்ளார்கள்.

போலி பட்டா
அவர்களும் எஞ்சி இருக்கும் இடங்களை பெற்றுத் தருவதாக கூறி, சீர்காழி வட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை வைப்பதற்காக சென்று இருக்கிறார்கள். அப்போதுதான் செண்பகசாமி கிராம மக்களிடம் வழங்கிய பட்டா போலியானது என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரூ.8 லட்சம் மோசடி செய்த செண்பகசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

காவல்நிலையத்தில் புகார்
பட்டா வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்துவிட்டு போலி பட்டா ஆவணங்களை செண்பகசாமி தங்களிடம் கொடுத்து ஏமாற்றிவிட்டதாக புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மீனவ பெண்கள் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செண்பகசாமி மற்றும் அண்ணாதுரை ஆகிய இருவரையும் தேடி வந்தனர்.

செண்பகசாமியை
இந்த நிலையில் இன்று செண்பகசாமியை போலீசார் கைது செய்தார்கள். அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்திய நிலையில் அவரை 15 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களிடம் இலவச வீட்டு மனைப் பட்டா வாங்கித் தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஒரு நாம் தமிழர் கட்சி நிர்வாகி.

நாம் தமிழர் கட்சி நிர்வாகி
அதுவும் நாம் தமிழர் கட்சியின் ஊழல் மற்றும் கையூட்டு ஒழிப்பு பிரிவின் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார். மோசடியை தடுக்க வேண்டிய கட்சிப் பொறுப்பில் இருக்கும் நபரே ஏழை மக்கள் 40 பேரிடம் லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications