அரசியல் நாடகங்கள் நடத்த மாட்டோம்... - தேர்தல் கமிஷனிடம் நடிகர் சங்கம் உறுதி
தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன் தலைமையில் நடிகர் சங்க நிர்வாகிகள், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், கடந்த பொதுத் தேர்தலில் இருந்து தேர்தல் காலங்களில் நாடகம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதால் இக்காலகட்டமான மூன்று மாதங்களும் எங்கள் நாடகக் கலைஞர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடுகிறது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வித் தொகையைச் செலுத்தக் கூட முடியாமல் போகிறது. எனவே இதைத் தாங்கள் பரிசீலித்து இந்தக் காலகட்டத்தில் நாடகம் நடத்துவதற்குச் சிறப்ப அனுமதி வழங்கி உதவிடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பொன்வண்ணன் கூறியதாவது:
கடந்தமுறை தமிழக முதல்வரைச் சந்தித்தபோது இதை ஒரு கோரிக்கையாகவே முன்வைத்தோம். நாடக நடிகர்களுக்கு எங்கள் அரசாங்கம் எப்போதும் முழு ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிறது. தேர்தல் காலகட்டத்தில் நாடக நடிகர்களுக்கு இப்படி ஒரு பிரச்னை உள்ளதென்றால் அதை ஒரு கோரிக்கையாக தேர்தல் அதிகாரியைச் சந்தித்து விண்ணப்பம் கொடுங்கள் என்று முதல்வர் ஒரு யோசனை சொன்னார்கள். அதன் அடிப்படையில் இன்று தேர்தல் அதிகாரி திரு. ராஜேஷ் லக்கானியைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தோம்.
தேர்தல் காலங்களில் மக்கள் சுதந்தரமாக செயல்படுவதற்குச் சட்டப்படி எந்தத் தடையுமில்லை. நான் இது பற்றி விசாரித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறைக்குத் தகவல் தெரிவிப்பதாக உறுதி அளித்தார். மேலும் முறைப்படி அவர்கள் முழு சுதந்தரமாக நாடகம் நடத்த வழிமுறை செய்கிறேன் என்று உத்தரவாதம் கொடுத்துள்ளார்.
தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதற்கான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நடிகர்களின் வீடியோ பதிவை கேட்டுக்கொண்டுள்ளனர். இதைச் செய்வதை நாங்கள் பெருமையாக நினைக்கிறோம். இந்த விழிப்புணர்ச்சியை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்று அவரிடம் உத்தரவாதம் கொடுத்துள்ளோம் என்று கூறினார்.
மேலும் தேர்தல் நேரத்தில் எந்த அரசியல் கட்சிக்கு சாதகமாகவும் நாடகங்களை நடத்தமாட்டோம் என்றும் நடிகர் சங்கம் உறுதியளித்துள்ளது.












Click it and Unblock the Notifications