குமரி மீனவர்களுக்கு ஆதரவு... நாகை, புதுச்சேரி, பழவேற்காட்டிலும் போராட்டத் 'தீ'!
காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிப்பதில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை என்று நாகை மாவட்ட மீனவர்களும் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.
நாகப்பட்டினம் : புயலின் போது காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிப்பதில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை என்று நாகை மாவட்ட மீனவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். அரசை கண்டித்து பேரணி, போராட்டம், ஆட்சியர் அலுவலகம் முற்றுகை என்று நாகை மாவட்டமும் போராட்ட களமாகியுள்ளது.
நாகப்பட்டினம் அக்கறைப் பேட்டை துறைமுகத்தில் இருந்து காலையில் நடைபெற்ற பேரணியில் ஆறுக்காட்டுத்துறை, பூம்புகார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் இதில் பங்கேற்றனர். மீனவர்களை மீட்க வேண்டும், தேடுதல் பரப்பளவை விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மீனவர்கள் பேரணியின் போது முன்வைத்தனர்.
காணாமல் போன மீனவர்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரணியில் பங்கேற்ற பெண்கள் தெரிவித்தனர். எங்கள் இன மக்களை காப்பாற்ற வேண்டும் இதற்காகத் தான் போராட்டத்தில் இறங்கியுள்ளோம் என்று கோபம் கொப்பளிக்கத் தெரிவிக்கின்றனர் பெண்கள்.
நாகை ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம்
இதே போன்று காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணி செல்ல போலீசார் அனுமதி மறுத்தால் நம்பியார்பேட்டை மீனவர்கள் 500 பேர் ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு எதிரே சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போன மீனவர்களை கண்டபிடித்துத் தர வலியுறுத்தி இன்று மீன் கடைகள் மூடப்பட்டுள்ளதோடு, மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை.
2 ஆயிரம் பேருடன் பழவேற்காட்டில் பேரணி
இதே போன்று கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக பழவேற்காடு மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் பேரணியில் பங்கேற்றனர். இன்று கடலுக்குச் செல்லாமல், மீன்கடைகளை அடைத்தும் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர்.
முன் அறிவிப்பில்லை
அரசு முன் அறிவிப்பின்றி செயல்பட்டதாலேயே மீனவர்களுக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டுள்ளதாக பேரணியில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை நேரில் சென்று பார்க்காமல் அரசு மெத்தனத்துடன் செயல்படுவதாகவும் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.