மோசமான சாப்பாடு... ஆதி திராவிட விடுதி மாணவிகள் போராட்டத்தால் பரபரப்பு
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே அகஸ்தீஸ்வரத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிட மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு கன்னியாகுமரி அரசு கலைக்கல்லூரி, அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் 80 பேர் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காலை இந்த மாணவிகள் அனைவரும் திடீரென விடுதி முன்பு திரண்டனர். அவர்களின் கைகளில் காலையில் அவர்களுக்கு விடுதியில் வழங்கப்பட்ட உணவு இருந்தது.
அதனை விடுதி வாயில் முன்பு வைத்து அவர்கள் விடுதி நிர்வாகிகளுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அகஸ்தீஸ்வரம் மற்றும் கோவளம் கிராம நிர்வாக அதிகாரிகளான லோகன்ராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விடுதிக்கு விரைந்து வந்தனர்.
இதற்கிடையே விவேகானந்தா கல்லூரி முதல்வரும், விடுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் விசாரித்தார். அப்போது அவர்கள் விடுதியில் தங்களுக்கு தரமான உணவு வழங்குவதில்லை என்றும், விடுதி காப்பாளர் பகல் நேரத்தில் விடுதியில் இருப்பதில்லை எனவும் தெரிவித்தனர்.
தரமான உணவு வழங்கக் கேட்டு பலமுறை முறையிட்டும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று காலை வழங்கப்பட்ட உணவும் மிகவும் மோசமாக இருந்ததால் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று காட்டமாக தெரிவித்தனர்.
இந்த போராட்டம் பற்றிய தகவல் துறையின் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தாசில்தார் சுப்பிரமணியன் விரைந்து வந்தார்.
அவரிடம் அப்பகுதி மக்கள் விடுதி காப்பாளர் மற்றும் நிர்வாகிகள் மீது சரமாரி புகார் கூறினர். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு மாணவிகள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications