இந்திரா காந்தி விருது பெற நடிகை மீனாவுக்கு என்ன தகுதி இருக்கு.. கொந்தளிப்பில் நடிகை நக்மா!
தமிழக காங்கிரஸ் கட்சியின் மகளிர் தின விழாவில் இந்திரா காந்தி பெயரில் நடிகை மீனாவுக்கு விருது வழங்குவதை ஏற்க முடியாமல் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியின் பொதுச்செயலர் நக்மா விழாவை புறக்கணித்துள்ளார்.
சென்னை: மகளிர் தின விழாவில் இந்திரா காந்தி பெயரிலான விருது வழங்க காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தேசிய பொதுச்செயலர் நடிகை நக்மா கடும் எதிர்ப்பு தெரிவித்து விழாவையே புறக்கணித்திருப்பது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி சார்பில் மார்ச் 11ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவை கொண்டாடுவதில் மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சிராணிக்கும், முன்னாள் எம்.எல்.ஏ.யசோதாவுக்கும் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. இரண்டு அணிகளாக பிரிந்து நின்றே மகளிர் தின கொண்டாட்டங்களை இருவரும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜான்சிராணிக்கு போட்டியாக தான் நடத்தும் மகளிர் தின விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்ட யசோதா, காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் நடிகையர், நடிகர்கள் என பலரையும் அழைத்திருக்கிறார். அதில் நடிகைகள் கே.ஆர். விஜயா, ஜெயசித்ரா, மீனா போன்ற நடிகைகள் விழாவுக்கு வர ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நடிகைகளுக்கு விருது ஒன்றையும் யசோதா வழங்குகிறார். மறைந்த காங்கிரஸ் தலைவர் இந்திராகாந்தி பெயரில் வழங்கப்படும் விருது நடிகை மீனாவுக்கும் வழங்கப்படும் என்று யசோதா முடிவு செய்து அறிவித்துள்ளார்.
இந்த விஷயம் தெரியாமல் யசோதா நடத்தும் மகளிர் தினவிழாவிற்கு முதலில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்ட நக்மா, தற்போது, மீனாவுக்கு விருது என்ற விஷயம் தெரிந்துவிட்ட நிலையில், நிகழ்ச்சிக்கு வர விருப்பமில்லை என்றும் நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
மீனாவிற்கு விருது கொடுப்பது தொடர்பான தகவல் கிடைத்த உடன் நக்மா, என்னிடம் சொல்லாமல் மீனாவுக்கு எப்படி விருது வழங்க முடிவு செய்தீர்கள்? இந்திராகாந்தி பெயரில் விருது பெறும் அளவுக்கு கட்சிக்கு மீனா என்ன தியாகம் செய்திருக்கிறார்? என கேள்வி கேட்டு யாசோதாவை கடுப்படித்தாராம்.
மீனா மீது நக்மாவுக்கு என்ன கடுப்போ?