குரானை படிக்காமலேயே முத்தலாக் பற்றி குஷ்பு பேசுவதா?: நறநற நக்மா
தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள நடிகைகள் நக்மா, குஷ்பு இடையே பகிரங்கமாகவே மல்லுக்கட்டு ஆரம்பித்து விட்டது.
சென்னை: சினிமாவில் நடிகைகளாக இருந்தபோதே குஷ்பு, நக்மா இடையே போட்டிதான். இப்போது இருவரும் ஒரே கட்சியில் இணைந்திருப்பதால் ஈகோ பிரச்சினை தலைதூக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரே கட்சியில் இருக்கும் நக்மாவுக்கும் குஷ்புவுக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக அரசல் புரசலாக தகவல் வெளியானாலும் அது வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வெட்டவெளிச்சமானது.
அருகருகே அமர்ந்திருந்த போது இருவரும் அப்படி ஒன்றும் சகஜமாக பேசிக்கொள்ளவில்லை. இது குறித்து நமது ஒன் இந்தியா இணையதளத்தில் கூட ' அப்படி என்ன அக்கப் போரோ?' என்று கேட்டு செய்தி வெளியிட்டிருந்தோம். மகளிர் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் இந்த உரசல் பகிரங்கமாக வெடித்துள்ளது.
மகளிர் காங்கிரஸ் கூட்டம்
ராகுல் காந்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டம் முடிந்ததும் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் குஷ்பு கலந்து கொள்ளவில்லை. அதுபற்றி கேள்வி எழுந்தது. நக்மாவிற்கும், குஷ்புவிற்கும் இடையே உரசல் இருப்பது உறுதியானது.
மகளிர் அணியினர் மத்தியில் பேசிய நக்மா, காலையில் ஆர்ப்பாட்டத்துக்கு வருவாராம். மாலையில் மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கு வர மாட்டாராம். குஷ்புவின் நடவடிக்கை பற்றி கட்சி மேலிடத்தில் தெரிவிப்பேன் என்று அனலை கக்கினாராம் நக்மா
பொட்டு வைப்பது ஏன்?
பொது சிவில் சட்டம் பற்றி பேச குஷ்புவுக்கு எந்த அருகதையும் கிடையாது. முஸ்லிமான அவர் சினிமாவில் பொட்டு வைத்து நடிப்பதில் தப்பில்லை. ஆனால், நிஜ வாழ்க்கையில் ஏன் பொட்டு வைக்கிறார்? என்று கேட்டார். இந்துவை கல்யாணம் செய்திருக்கிறேன் அதனால் பொட்டு வைத்திருக்கிறேன் என்று கூறுவார்.
குரான் படித்திருக்கிறாரா?
இந்துவை கல்யாணம் செய்தவர், முஸ்லிம் ஷரியத் சட்டம் பற்றி இவர் ஏன் பேச வேண்டும்? என்று கேட்டார் நக்மா, ஷரியத் சட்டம் மனிதன் உருவாக்கியது. குரானில் ‘தலாக்' பற்றி இல்லை என்று குஷ்பு கூறியிருக்கிறார். குரானை குஷ்பு படிக்கவில்லை. ஏன் பார்த்து கூட இருக்க மாட்டார். முத்தலாக் பற்றி குரானிலும் சொல்லப்பட்டுள்ளது. காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்துகளை தெரிவிக்கும் குஷ்புவுக்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று காட்டமாக கூறினார் நக்மா.
இதுதான் வேலையா?
நக்மாவின் பேச்சு பற்றி குஷ்புவிடம் சில செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு குஷ்பு, நான் அகில இந்திய செயலாளர். எனக்கும் மாநில மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பது வேறு விஷயம். மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கு என்னை கூப்பிடவில்லை. அதோடு எனக்கு படப்பிடிப்பு இருந்தது. ஷூட்டிங்கை இடையில் நிறுத்தி விட்டுத்தான் ஆர்ப்பாட்டத்துக்கு வந்தேன். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்புக்கு புறப்பட்டு சென்று விட்டேன் என்று கூறினார்.
கருத்து கூற மாட்டேன்
நான் என்ன சாப்பிடுகிறேன்? என்ன பேசுகிறேன்? யாருடன் பேசுகிறேன் என்று என்னைப் பற்றி விமர்சிக்கவே ஒரு கும்பல் இருக்கிறது. நக்மா பேசியதை 'நான் கண்ணால் பார்க்கவும் இல்லை. காதால் கேட்கவும் இல்லை. எனவே அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று கூறிவிட்டு விருட்டென்று சென்று விட்டார்.
மகளிர் மல்லுக்கட்டு
காங்கிரஸ் கட்சி என்றாலே கோஷ்டி பூசலுக்கும், மல்லுக்கட்டுக்கும் பஞ்சமிருக்காது. ராகுல்காந்திக்காக அனைத்து கோஷ்டி தலைவர்களும் ஒன்றாக இணைந்து ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். மகளிர் காங்கிரசில் இப்போது குஷ்புவிற்கும் நக்மாவிற்கும் இடையே புது மல்லுக்கட்டு உருவாகியிருக்கிறது என்பதுதான் வேடிக்கை.