சாத்தூரில் நயினார் கரை சேர்வது கடினம் போல.. உள்ளூர் நிர்வாகிகள் அதிருப்தியாம்.. களவரமான நிலவரம்?
விருதுநகர்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் வெல்வது கடினம் கள நிலவரம் தெரிய வந்துள்ளன. நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளை நம்பாமல், நெல்லையில் இருந்தே பணியாற்றி இருக்கிறார். இதனால் இரு தரப்பும் நயினார் நாகேந்திரன் மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்காக வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நிறைவடைந்தது. அதில் மொத்தமாக 85.15% வாக்குகள் பதிவான நிலையில், அது மே 4ஆம் தேதி எண்ணப்படவுள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. அதில் பெரும்பாலானவை திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், Axis My India தவெக ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன.

ஜேவிசி மற்றும் வோட் வைப் ஆகிய இரு தரப்பு மட்டுமே அதிமுகவுக்கு ஆதரவாக கணிப்பை வெளியிட்டுள்ளன. இதில் ஜேவிசி நீண்ட நாட்களாகவே அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் நிறுவனம் தான். இதனால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்று கருத்து நிலவி வருகிறது. இதனிடையே பாஜக எத்தனை தொகுதிகளில் வெல்லும் என்ற விவாதமும் நடந்து வருகிறது.
குறிப்பாக நெல்லை தொகுதியில் இருந்து சாத்தூர் தொகுதிக்கு மாறிய நயினார் நாகேந்திரன் மீண்டும் சட்டசபை செல்வாரா என்ற கேள்வி உள்ளது. சாத்தூர் தொகுதியில் திமுக சார்பாக நாயுடு சமூகத்தைச் சேர்ந்த கடற்கரை ராஜ் களத்தில் இருக்கிறார். அதேபோல் சசிகலா தரப்பில் இசக்கி ராஜா என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார்.
இவர் முக்குலத்தோர் சமூக அமைப்பு வைத்திருப்பதால், நயினார் நாகேந்திரனுக்கு சவால் அளிப்பார் என்று கருதப்படுகிறது. அதேபோல் விஜய் தரப்பில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த அஜித் களமிறக்கப்பட்டுள்ளார். இதில் இசக்கி ராஜா முக்குலத்தோர் அமைப்பு வைத்து நடத்தி வருபவர். இதனால் முக்குலத்தோர் வாக்குகளில் சுமார் 10 ஆயிரம் வாக்குகளை பிரிப்பார் என்று தெரிகிறது.
அதேபோல் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதிக்கு மாறியதால், அங்கிருந்த பாஜக மற்றும் அதிமுகவினர் அதிக எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் கடைசி நேர வைட்டமின் எம் விநியோகத்திற்கு கூட நெல்லையில் இருந்தே தனது குழுவை நயினார் நாகேந்திரன் இறக்கியுள்ளார். இதனால் அதிமுக மற்றும் பாஜகவினர் அதிருப்தியில் இருக்கின்றனர்.
தவெக வேட்பாளரும் கூட கணிசமான வாக்குகளை பிரிக்கிறார். இதனால் சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன் கரை சேர்வது கடினம் என்று கள நிலவரங்கள் சொல்லுகின்றன. நயினார் நாகேந்திரனுக்கு இணையாக திமுக வேட்பாளர் வைட்டமின்களை இறக்கி இருக்கிறார். இதனால் வெற்றி, தோல்வி இடையிலான வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications