தந்தை ஈமச்சடங்கில் பங்கேற்க ஒருநாள் பரோலில் சென்னை வந்தார் நளினி
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி, தந்தையின் ஈமச்சடங்கில் கலந்து கொள்ள ஒருநாள் பரோலில் நேற்று இரவு சென்னை வந்துள்ளார்.
முன்னாள் பிரதமர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நளினி.
நளினியின் தந்தை சங்கர நாராயணன் கடந்த மாதம் 23ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து, நளினி 24ம் தேதி பரோலில் வெளிவந்து, தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார். இந்நிலையில், தந்தையின் ஈமக்காரியங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று, மார்ச் 8,9,10 ஆகிய மூன்று நாள் பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் கடந்த 2ம் தேதி நளினி விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் அந்த கோரிக்கை மீது சிறைத்துறை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதையடுத்து சென்னை ஹைகோர்ட்டில், பரோல் அனுமதி கேட்டு நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. நளினியை பரோலில் விடக்கூடாது என்று தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது. முக்கியமான விஷயங்களுக்கு மட்டுமே பரோல் தரப்பட வேண்டும். எனவே நளினிக்கு இப்போது பரோல் தேவையில்லை என்று வாதிடப்பட்டது.ஆனால், 16வது நாள் ஈமச்சடங்கில், மகள் என்ற முறையில் கலந்து கொள்ள வேண்டும், என்று நளினி சார்பில் வாதிடப்பட்டது.
நளினி தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி மாலா, அவருக்கு ஒருநாள் பரோல் வழங்கி உத்தரவிட்டார். நேற்று மாலை 4 மணி முதல் இன்று மாலை 4 மணிவரை நளினிக்கு பரோல் வழங்கப்பட்டது.
மேலும் பரோலில் வரும் நளினி தனது உறவினர்களைத் தவிர வேறு யாருடனும் பேசக் கூடாது எனவும் பத்திரிக்கையாளர்களை சந்திக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி அங்கிருந்து சென்னைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் அழைத்து வரப்பட்டார்.
நேற்று இரவு சென்னை கோட்டூர்புரம் வந்த அவர், தற்போது அவரது சகோதரர் இல்லத்தில் உள்ளார். முன்னதாக கோர்ட் ஆணை கிடைக்க தாமதமானதால் சிறையில் இருந்து நளினி வெளியே வருவதில் சற்று தாமதம் ஆகியது.