கோயிலுக்கு சென்ற ஸ்டாலினை திமுகவில் இருந்து கருணாநிதி நீக்குவாரா? நமது எம்ஜிஆர் கேள்வி
சென்னை: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ததற்காக, நடிகர் சிவாஜி கணேசனை திமுகவில் இருந்து நீக்கியதை போல, திருக்கோஷ்டியூர் கோயிலுக்குள் சென்ற ஸ்டாலினையும், கருணாநிதி கட்சியை விட்டு நீக்குவாரா என்று, அதிமுக கட்சி பத்திரிகையான நமது எம்ஜிஆர் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
நமக்கு நாமே என்ற பெயரில் பிரச்சார கூட்டங்கள் நடத்திவருகிறார் திமுக பொருளாளரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின். சில தினங்கள முன்பு, சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் சென்ற இடத்தில், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலுக்கும் ஸ்டாலின் சென்றார். அவர் மனைவி துர்காவும் அப்போது உடனிருந்தார்.

108 வைணவத்தலங்களில் ஒன்றான திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில், ராமானுஜர் வருகை தந்த தலமாகும். ஸ்டாலின் மனைவி துர்கா, தீவிர கடவுள் பக்தர். அவ்வப்போது அவர் கோயில்களுக்கு செல்வதும், அது ஊடகங்களில் வெளிவருவதும் சகஜமான ஒன்று.
ஆனால், ஸ்டாலின் கோயிலுக்கு சென்றது மிகவும் அரிதான நிகழ்வு. கடவுள் மறுப்பு, அதிலும் குறிப்பாக இந்து கடவுள்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட தி.கவிலிருந்து உதயமான திமுகவும் அதே கொள்கையோடுதான் இருந்தது. இந்நிலையில்தான், திமுக பொருளாளர் கோயிலுக்கு சென்றது பற்றி, அதிமுக கட்சி பத்திரிகை நமது எம்.ஜி.ஆர் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததற்காக, அப்போது திமுகவில் இருந்த நடிகர் சிவாஜி கணேசன் கட்சியை விட்டே நீக்கப்பட்டார். அதே பாணியில், ஸ்டாலினையும் கட்சியை விட்டு திமுக நீக்குமா?
கடவுள் மறுப்பு கொள்கையில் இருந்து கட்சியை நகர்த்தி செல்வதற்காக ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தி.க தலைவர் வீரமணியிடம், கருணாநிதி அறிவுரை கேட்டுவருகிறாரா?
இந்துக்களை திருடர்கள் என்று கூறி அசிங்கப்படுத்தியதற்கும், ராமபிரானை பற்றி விமர்சனம் செய்ததற்கும், மன்னிப்பு கோர ஸ்டாலினை கோயிலுக்கு அனுப்பி வைத்தாரா கருணாநிதி?
கடவுள் ராமர் எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தார் என்று தந்தை கேட்டதற்கு பதில் கண்டுபிடிக்க கோயிலுக்குள் சென்றாரா? இவ்வாறெல்லாம் நமது எம்ஜிஆர் கேள்வி எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications