கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி யுவராஜை கைது செய்ய பிடிவாரண்ட்...
நாமக்கல்: தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜை கைது செய்ய நாமக்கல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் தலித் இளைஞர் கோகுல்ராஜ். இவர் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார்.
இந்த காதலை அப்பெண்ணின் உறவினர்கள் ஏற்கவில்லை. இதனால் ஜாதி மறுப்பு திருமணங்களை தடுத்து நிறுத்தும் தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜிடம் அவர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கோகுல்ராஜை யுவராஜின் அடியாட்கள் கடத்திச் சென்றுள்ளனர். இத்தகவலை கோகுல்ராஜின் காதலியே நண்பர்களிடம் தெரிவித்திருந்தார். இதன் பின்னர் கோகுல்ராஜ் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
முதலில் இது தற்கொலை எனக் கூறப்பட்ட நிலையில் ஜாதிவெறியால்தான் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கை தலித் பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா விசாரித்து வந்தார். இக்கொலை சம்பவத்தின் முதல் குற்றவாளியான யுவராஜ் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார்.
அதே நேரத்தில் இந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டனர்.. அவர்கள் மீது குண்டர்தடுப்பு சட்டமும் பாய்ந்தது. ஆனால் போலி குற்றவாளிகளை வழக்கில் சேர்க்க உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாக கூறி டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கோகுல்ராஜ் கொலை வழக்கு, விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு இரண்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் வாட்ஸ் அப் மூலம் ஆடியோ பதிவுகளை அனுப்பி வந்த தலைமறைவு குற்றவாளி யுவராஜ் தனியார் தொலைக்காட்சியில் பேட்டியும் அளித்திருந்தார்.
இதனிடையே செப்டம்பர் 27-ந் தேதியன்று நேரில் ஆஜராக யுவராஜூக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வேண்டுகோளை ஏற்று யுவராஜை கைது செய்வதற்கான பிடிவாரண்ட்டை நாமக்கல் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.
போலீசாருக்கு சவால்விடும் வகையில் தொடர்ந்து வாட்ஸ் அப் மூலம் பேசிவரும் யுவராஜின் கண்ணாமூச்சி ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரக் கூடும் என கூறப்படுகிறது.