துக்க வீட்டிலிருந்து திரும்பிய 2 பெண்கள் கார் மோதி பரிதாப பலி
நாமக்கல்: நாமக்கல்லில் துக்கம் விசாரித்து விட்டு திரும்பியவர்கள் மீது கார் மோதியதில் இரு பெண்கள் பரிதாபமாக பலியாகினர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள குமரிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மாமரத்துபட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி காளியம்மாள். சுப்பிரமணியின் தம்பி ராமசாமியின் மனைவி பாப்பாயி.
இவர்களும் அதே பகுதியை சேர்ந்த தங்கம்மாள், சின்னப்பிள்ளை ஆகிய 4 பேரும் செவிட்டுரங்கன்பட்டியை சேர்ந்த இவர்களின் உறவினரான நடேசன் என்பவர் இறந்ததை தொடர்ந்து துக்கம் விசாரிக்க சென்றனர். அங்கு துக்கம் விசாரித்து விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருன்தனர்.
செவிட்டுரங்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு அவர்கள் நடந்து சென்றபோது, வளையப்பட்டியில் இருந்து மோகனூர் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக காரின் முன்பகுதி டயர் வெடித்தது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டு இருந்த காளியம்மாள், பாப்பாயி, தங்கம்மாள் ஆகியோர் மீது மோதியது.
இந்த விபத்தில், காளியம்மாள், பாப்பாயி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் இறந்த 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
விபத்தில் தங்கம்மாள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தங்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications