நமக்கு நாமே பயணத்தை பார்த்து ஜெயலலிதாவுக்கு பயம் வந்துவிட்டது: ஸ்டாலின்
சேலம்: நமக்கு நாமே பயணத்தைக் கண்டு பிற எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளுங்கட்சியும் அச்சப்படுவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நமக்கு நாமே விடியல் மீட்பு 3ம் கட்ட பயணத்தை சேலத்தில் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை துவக்கினார். நேற்று இரண்டாவது நாளாக சேலம் மாநகரில் கட்டுமான தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள், வெள்ளிப்பட்டறை தொழிலாளர்கள், விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

மக்கள் வரவேற்பு
சேலம் கடை வீதி, செவ்வாய்ப்பேட்டை பகுதியில் நடைபயணம் சென்று மக்களை சந்தித்தார். பல்வேறு தரப்பினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிற்பகலில் அயோத்தியாபட்டணத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பேசினார். சேச்சன் சாவடியில் பாக்கு தோட்ட தொழிலாளர்களையும் சந்தித்து பேசினார்.

ஆலோசனைக்கூட்டம்
ஆத்தூரில் விவசாயிகள், சேகோ ஆலை உரிமையாளர்கள், அரிசி உற்பத்தியாளர்கள், ஒருங்கிணைந்த விவசாயிகள் நலச்சங்கம், நெல் அரிசி வியாபாரிகள் சங்கத்தினரிடம் மு.க. ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

சத்துணவில் ஜவ்வரிசி
நீங்கள் எதிர்பார்க்கும் ஊழலற்ற நல்ல ஆட்சியைக் கொண்டு வருவோம். ஜவ்வரிசியை சத்துணவில் சேர்க்க வரும் ஆட்சியில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஜவ்வரிசி உற்பத்தியில் நீங்கள் படும் இன்னல்களைக் களையவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

துருப்பிடித்த ஆட்சி
மாணவர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் 4 ஆண்டுகளாக ஒரு நிர்வாகமே நடக்காத துருப்பிடித்த ஆட்சி நடக்கிறது. நமது சமுதாயம், சந்ததி, நலமுடன் வாழ அரசு சிறப்பானதாக இருக்க வேண்டும். ஆனால், அதிமுக ஆட்சியில் மாணவர்கள், விவசாயிகள் உள்பட யாரும் நிம்மதியாக இல்லை. வருங்காலத்தை உருவாக்கக்கூடிய சக்தி, தமிழகத்தை செதுக்கக்கூடிய நம்பிக்கை நட்சத்திரம் இந்த மாணவ சமுதாயம்தான் என்றார்.

முடக்கிய அரசு
திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் அதிமுக அரசு முடக்கி வைத்து வருகிறது. மக்கள் நலப்பணியாளர்கள், சாலைப்பணியாளர்களை திமுக அரசு நியமித்தது என்பதற்காக மீண்டும் மீண்டும் அதிமுக அரசு பணி நீக்கம் செய்தது. மக்கள் நலப்பணியாளர்கள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்று பணி நியமனம் பெறுவதற்கான தீர்ப்பினை பெற்று வந்த பின்னும் அவர்கள் இன்னும் பணியமர்த்தப்படாமல் உள்ளனர்.

கைவிட மாட்டோம்
டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், குழந்தைகளுக்கு மது கொடுக்கும் நிலை ஏற்பட்டதால் சமுதாயத்தை பாதுகாக்க டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று கருணாநிதி கூறினார். தற்போது நீங்களே டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்று வலியுறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையும் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்பதுதான். கடைகளை மூடினாலும் உங்களை கைவிடமாட்டோம் என்றார்.

ஜெயலலிதா கோபம்
தன்னுடைய நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், இதனைக் கண்டு முதலமைச்சர் ஜெயலலிதா கோபம் கொண்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications