நாங்குநேரி இரட்டை கொலை - 20 பேர் கைது
நெல்லை: நாங்குநேரி அருகே நடந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இக்கொலையில் தொடர்புடைய பலரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கரந்தாநேரி மற்றும் பாணங்குளத்தை சேர்ந்த இருபிரிவினரிடையே முன்விரோதம் காரணமாக மோதல் இருந்து வந்தது. கடந்த 12ம் தேதி இரவு கரந்தாநேரியை சேர்ந்த வேலுச்சாமி, மாரிக்கனி மற்றும் நெடுங்குளம் கணேசன் ஆகியோர் வெட்டப்பட்டனர். இதில் மாரிகனி, வேலுச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த இரட்டை கொலை தொடர்பாக மூன்றடைப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பாணங்குளத்தை சேர்ந்த 11 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நாங்குநேரி டிஎஸ்பி சண்முகம், வள்ளியூர் டிஎஸ்பி பாலாஜி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய பாணங்குளத்தை சேர்ந்த சின்னபாண்டி, கருப்பசாமி, ரெங்கன், செல்வம், மற்றொரு கருப்பசாமி ஆகிய 5 பேரை தனிப்படையினர் முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் நாங்குநேரி இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் விசாரணை நடத்தினார்.
இதில் பாணங்குளத்தை சேர்ந்த சின்னபாண்டி, வானமாலை ஆகியோர் டிவி பழுது பார்ப்பதற்காக கரந்தாநேரி வழியாக பைக்கில் சென்றிருக்கின்றனர். இதை அப்பகுதியை சேர்ந்தவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பாணங்குளத்தை சேர்ந்தவர்களை பழிவாங்கும் நோக்கில் வேலுசாமி, மாரிக்கனியை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் சேரன்மகாதேவி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி மாயக்கண்ணன் அவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டார். மற்ற 10 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கொலையான வேலுச்சாமியின் உறவினர்கள் விரைந்து வந்து கராந்நேரி நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் மற்றொரு பிரிவினர் வேலுச்சாமி வீட்டை நோக்கி கற்களை வீசயதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி பாணங்குளததை சேர்ந்த நல்லகண்ணு, சுப்பிமணியன், முருகன், பழனி, பண்டாரம், சுப்பையா, ஜெய்சங்கர், சண்முகவேல், கொம்பையா, மற்றொரு கொம்பையா, முருகன், நம்பிராஜன், வேல்முருகன், முத்து, ஆபத்துகாத்தான் ஆகிய 15 பேரை கைது செய்தனர். அவர்கள் சேரன்மகாதேவி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications