அம்மாவின் ஆட்சி தொடர வாக்கு பிச்சை போடுங்க... நாகர்கோவிலில் கேட்ட நாஞ்சில் சம்பத்
நாகர்கோவில்: தமிழக மக்களுக்கு எந்த குறையுமில்லை. மக்களுக்கு குறையிருந்தால் தானே மக்களை அம்மாவை சந்திக்க வேண்டும். இப்போது நிர்வாகம் சீராக இயங்குகிறது என்று அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். வாக்காளர்களாகிய உங்களிடம் பிச்சைக்காரனை போல வாக்கு பிச்சை கேட்கிறேன். அம்மாவின் ஆட்சிக்கு நாகர்கோவிலில் அச்சாரமிடுங்கள் என்றும் கூறினார்.
தமிழகம் முழுவதும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாகர்கோவில் சட்டசபைத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரான நாஞ்சில் முருகேசனுக்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர்,
எம்.ஜி.ஆர். இருக்கும் வரை கருணாநிதியின் முதல்வர் கனவு நிறைவேறவில்லை அதற்கு பின் இப்போது வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று, எம்.ஜி.ஆர்.போல தொடர்ச்சியாக முதல்வர் பதவியில் அம்மா அமர்வார் என்று கூறினார்.

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு வளமாக இருக்கிறது .கடந்த தேர்தலிலே அம்மா 54 வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அவைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டார்கள். சொல்லாத வாக்குறுதிகளாக அம்மா சிமென்ட, அம்மா உப்பு, அம்மா கைபேசி, அம்மா குடிநீர் என என்னெற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
அம்மாவின் ஆட்சியை, மக்கள் யாரும் குற்றசாட்டவில்லை. ஆனால் நான்கு வருடம் சும்மா இருந்துவிட்டு, 64 வயது கிழவன் 24 வயது இளைஞன்போல முடியட்டும் விடியட்டும் என்று வீதி வீதியாக செல்கிறார் என்று கூறினார்.
தமிழ்நாட்டின் பிரச்னைகள் எதுவும் கருணாநிதியின் ஆட்சியில் தீர்க்கப் படவில்லை. அந்த 5 ஆண்டும் தமிழகம் இருளிலே மூழ்கி கிடந்தது. அப்போது, மிக்சி இருக்கும் இடத்தில் அம்மி, கிரைண்டர் இருக்கும் இடத்தில் உரல், மின்விசிறி இருக்கும் இடத்தில் விசிறி என்று தானே இருந்தது.18 மணி நேரம் மின்சாரம் இல்லை. தமிழகம் இருளிலே இருக்க வேண்டும் என ஆசைபட்ட கருணாநிதி, .மத்திய அரசு கொடுக்க வந்த 1,000 மெகாவாட் மின்சாரத்தை தடுத்தார் என்று கூறினார்.
தமிழ்நாட்டிலே நீர் பாசனத்திலே முல்லை பெரியாறு, நெய்யாறு இடதுகரை கால்வாய் போன்ற பிரச்னைகளை தீர்க்க, மத்தியில் தி.மு.க. அங்கம் வகிக்கும்போது நீர்பாசன அமைச்சர் துறையை வாங்கினாரா? இல்லை ராணுவ அமைச்சர் துறையை தான் கேட்டு வாங்கினாரா? பணம் கொழிக்கும் இலாகாவை தானே கேட்டு வாங்கினார்.
கருணாநிதியின் ஆட்சியில் தமிழர் உரிமை நிலை நாட்டபட வில்லை. இலங்கை தமிழர்கள் காக்கப்படவில்லை. தி.மு.க.-காங்கிரஸ் டெல்லியில் கூட்டணியில் இருக்கும்போது தான் மிகப் பெரிய இனப் படுகொலை நிகழ்ந்தது.
அப்போது டெல்லி, இலங்கைக்கு ஆயுதம் கொடுத்தது. கோடிக் கணக்கில் பணத்தை கொடுத்தது, ராணுவ தடவாளங்களை கொடுத்து இனப் படுகொலை செய்ய வைத்தது. தமிழரின் மானத்தை கெடுத்தவர் கருணாநிதி. நாட்டு மக்கள் பணத்தில் கருணாநிதியின் மக்கள் கொண்டாட்டம் போட்டனர்.
அ.தி.மு.க. காப்பாற்றபட்டால் தான் மக்களும் காப்பாற்றப்படுவார்கள். மத்திய அரசு அறிவித்துள்ள 10 விருதுகளில் 8 விருதுகளை அ.தி.மு.க. அரசு வாங்கியது.
அம்மாவின் ஆட்சியில் பசியில் இருந்து விடுதலை, அச்சத்தில் இருந்து விடுதலை. அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை அவரால் மக்களை சந்திக்க முடியாது என்கிறனர். மக்களுக்கு குறையிருந்தால் தானே மக்களை அம்மாவை சந்திக்க வேண்டும்.
இப்போது நிர்வாகம் சீராக இயங்குகிறது. இது தொடர வேண்டும் என்பதால், வாக்காளர்களாகிய உங்களிடம் பிச்சைக்காரனை போல வாக்கு பிச்சை கேட்கிறேன். அம்மாவின் ஆட்சிக்கு நாகர்கோவிலில் அச்சாரமிடுங்கள். அதிமுகவின் கடைசி தொண்டனாக கேட்கிறேன், .அம்மாவின் ஆட்சி 6-வது முறையாக அமைய அச்சாரம் அமைத்துத் தாருங்கள் என்று கேட்டார் நாஞ்சில் சம்பத்.
யானைகள் நடந்தால் எறும்புகள் சாகத்தானே செய்யும் என்று டிவி பேட்டியில் சொல்லி பதவியை பறிகொடுத்தவர் நாஞ்சில் சம்பத், இப்போது இந்த பிரச்சாரத்திற்கு என்ன பரிசு வாங்கப் போகிறாரோ?












Click it and Unblock the Notifications