எங்க பார்த்தாலும் இலை அலைதான்... மதுரையிலிருந்து நாஞ்சில் சம்பத்!
மதுரையில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
ராஜீவ்காந்தி படுகொலையில் சம்பந்தம் இல்லாமல் கைது செய்யப்பட்டு 23 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அப்பாவி தமிழர்கள் 7 பேரை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்ய முதல்வர் அம்மா சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.
இது அவர் செய்த சாதனைகளிலேயே முதன்மையானது. உலக தமிழ் இனமே வியந்து பாராட்டுகிறது. ஆனாலும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு இன்னும் ரத்தவெறி அடங்கவில்லை. தமிழனுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதில்தான் மத்திய அரசு குறியாக உள்ளது. இன்னும் சில மாதங்களில் அந்த அரசு துடைத்து எறியப்படும்.
7 பேர் விடுதலை அறிவிப்பை பாரதீய ஜனதா தலைவர்களான ரவிசங்கர் பிரசாத், அருண்ஜெட்லி போன்றோர் அரசியல் நடவடிக்கை என்று குறை கூறி வருகிறார்கள். இந்த கூட்டணியில் தான் வைகோ இருக்கிறார். அவருக்கு பாரதீய ஜனதா தலைவர்களின் கருத்து ஏற்புடையது தானா? ஏன் இன்னும் வைகோ மோடிக்கு காவடி தூக்குகிறார் என்பது தெரியவில்லை.
தமிழகத்தில் மோடி அலை வீசவில்லை. அடுத்த பிரதமராக அம்மாவை அரியனையில் அமர வைக்க இலை அலை தான் வீசுகிறது.
தமிழகத்தின் அ.தி.மு.க.வை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் காணாமல் போய்விட்டன. தமிழ் இனத்தின் ஒரே தலைவராக முதல்வர் அம்மா திகழ்கிறார் எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தல் களத்தில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்றார் சம்பத்.