ஆர்கே நகரில் இலை சாயும் பக்கமே வெற்றிக் குலை சாயும், சூரியன் அஸ்தமிக்கும்- நாஞ்சில் சம்பத் 'ஆரூடம்'
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவும் என சசிகலா அணியின் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நிச்சயம் திமுக தோல்வியைத் தழுவும் என 'வரலாற்று' சம்பவங்களை முன்வைத்து சசிகலா அணியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆருடம் கூறியுள்ளார்.
நாஞ்சில் சம்பத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் கரைபுரண்டோடும் அடுக்குமொழி தமிழால் அள்ள அள்ள குறையாத சர்ச்சைதான்.. டிடிவி தினகரனை 'தின்னியன்' என புகழாரம் சூட்டுவதாக நினைத்துக் கொண்டு பதிவிட்டு பஞ்சாயத்தாகிவிட்டது.
தின்னியன் என்றால் அதிகமாக சாப்பிடுவர்; திண்ணியன் என்றால்தான் வலிமையானவர் என்கிற அர்த்தம் வரும் என இடித்துக் காட்டினர் நமது ஒன் இந்தியா வாசகர்கள். இன்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாஞ்சில் சம்பத், அடுக்கு மொழிகளை கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார்.
பன்னீர் எனும் இடைச் செருகல்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நாஞ்சில் சம்பத் பதிவிட்டுள்ளதாவது: ஆர்கே நகரில் திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது என்று அதன் செயல் தலைவர் திருவாய்மலர்ந்து அருளியிருக்கிறார். பன்னீர் என்கிற இடைச்செருகல் தனக்கு பக்கபலமாக இருக்கும், அதிமுகவின் வாக்குவங்கி சிதறும் என்ற கனவில் மூழ்கிப்போயுள்ளார் முக ஸ்டாலின்.
எம்ஜிஆர் காலத்தில்..
ஆனால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் காலத்தில் தலைநகர் சென்னையில் எல்லாத்தொகுதிகளிலும் திமுக வெல்ல அதிகாரத்தில் இருந்த எம்ஜிஆருக்கு ஆதரவு அளித்த ஒரே தொகுதி ஆர்கேநகர்.
சொல்லிமாளாத சாதனைகள்..
அந்த தகுதி ஆர்கே நகர் தொகுதிக்கு இன்றைக்கும் இருக்கும் என்றைக்கும் இருக்கும். அம்மாவுக்கு ஆதரவு அளித்த ஆர்கே நகர் மக்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்துகொடுத்தும் அரசின் சார்பில் கலைஅறிவியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, வேலைவாய்ப்புமுகாம் என சொல்லிமாளாத சாதனைகளை அம்மாவின் அரசு செய்து கொடுத்து இருக்கிறது.
சூரியன் அஸ்தமிக்கும்
ஆர்கே நகர் மக்கள் நன்றி உணர்ச்சியுள்ள மக்கள், அந்த மக்களை திமுக திசை திருப்ப முடியாது, இலை சாயும் பக்கமே, வெற்றிக்குலை சாயும்; ஆர்கே நகரில் சூரியன் அஸ்தமிக்கும்.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் பதிவிட்டுள்ளார்.