ஜெ.வை சட்டசபையில் தாக்கியது யார்.. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியது யார்.. நாஞ்சில் சம்பத் கேள்வி!
காஞ்சிபுரம்: சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவை தாக்கியது திமுகவினர்தான். சட்டசபை ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கியது திமுகவினர்தான். அவர்கள் இன்றைக்கு சட்டசபை ஜனநாயகம் குறித்துப் பேசுகிறார்கள் என்று அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் சாடியுள்ளார்.
கா{ஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில், தமிழக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு நாஞ்சில் சம்பத் சிறப்புரையாற்றினார். அவரது பேச்சிலிருந்து....

நடப்பது நல்லாட்சி
தமிழகத்தில் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது. நாட்டின் பிற மாநிலங்களும் உற்று நோக்கும் வகையில் மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டு வருகின்றார்.

சட்டசபை ஜனநாயகம் பற்றிப் பேசும் திமுக
இன்றைக்கு சட்டசபையில் ஜனநாயகம் பற்றி தி.மு.க. பொதுக் கூட்டங்கள் நடத்தி வருகின்றது. சட்டசபையில் ஜனநாயகத்தினை கேலிக் கூத்தாக்கிய பெருமை தி.மு.க.வையே சாரும்.

ஜெ.வைத் தாக்கினரே...
சட்டசபையில் இன்றைய தமிழக முதல்வரை தாக்கியது தி.மு.க. வினர்தான். அறிஞர் அண்ணாவின் குடும்பத்தினரையே கண்டு கொள்ளாத கருணாநிதி தன்னுடைய கட்சி தொண்டனை எப்படி கண்டு கொள்வார்.

செயல் திறன் படைத்த ஒரே முதல்வர்
ஆனால், தமிழக முதல்வர் அம்மா அறிஞர் அண்ணாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி 75 லட்ச ரூபாயினை அளித்தவர் ஆவார். இன்றைக்கு அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம் என மக்களின் தேவையினை அறிந்து அதனை திறம்பட செயலாற்றும் செயல்திறன் படைத்த ஒரே முதல்வர் தமிழக முதல்வர் மட்டுமே என்றார் சம்பத்.












Click it and Unblock the Notifications