உங்களுக்கு இனி நல்லா பொழுது போகும்... செய்தியாளர்களை கிண்டலடித்த நாஞ்சில் சம்பத்
உங்களுக்கு இனி நல்லா பொழுது போகும் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் நாஞ்சில் சம்பத்.
சென்னை: தமிழக அரசியலில் அரங்கேறும் கூத்துக்களை செய்திகளாக சேகரிக்கச் செல்லும் செய்தியாளர்களைப் பார்த்து, உங்களுக்கு இனி நன்றாக பொழுது போகும் என்று கூறியுள்ளார்.
அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்துள்ளன. இரு அணிகளும் இணைய 60 நாட்கள் கெடு கொடுத்தார் தினகரன். ஆனால் சசிகலா குடும்பத்தினரை நீக்கிய பின்னரே இணைப்பு என்று ஓபிஎஸ் அணி கூறி விட்டதால் தினகரனை முதலில் நீக்கினர்.
தொடர்ந்து ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை, ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவோம் என சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போதே அணிகள் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகின. அமாவாசை தினமான நேற்று இரு அணிகளும் இணைந்தன.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்
முதலில் இணைப்புக்கு கெடு விதித்த தினகரன், தற்போது இந்த இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு தள்ளாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாஞ்சில் சம்பத் பேட்டி
தினகரன் ஆதரவு நிலைப்பாடு பற்றி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், வாக்கெடுப்பு நடத்தும்போதுதான் எங்கள் நிலைப்பாடு பற்றித் தெரியும். வெறும் 19 எம்.எல்.ஏக்கள் மட்டுமல்ல, 89 பேர் இருக்கிறார்கள். எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
அறுவை சிகிச்சை
பொதுச் செயலாளருக்குத்தான் எல்லா அதிகாரமும் இருக்கிறது. அவர் யார் மீது வேண்டுமானாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். இன்று ஒரு நம்பிக்கைத் துரோகியை கட்சியிலிருந்து நீக்கியுள்ளோம். அறுவை சிகிச்சையை இன்றுதான் ஆரம்பித்துள்ளோம்.
காட்டிக்கொடுத்தவர்கள்
அதிமுகவை காட்டிக்கொடுத்து, கட்சி சின்னத்தை முடக்கிய ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதல்வராக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இரும்புக் கோட்டையில் துருவுக்கு என்ன வேலை.
துரோகிக்கு இடமா?
ஜெயலலிதா உருவம் போன்ற சடலத்தை வைத்துக்கொண்டு ஆர்.கே. நகரில் தினகரனுக்கு எதிராக வாக்கு சேகரித்தாரே? மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் சபையில் இடம் தரலாமா? அவர் துரோகியில்லையா?.
நல்லா பொழுது போகும்
அரசைக் கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. நடப்பது எங்கள் ஆட்சிதான். எங்களுக்கு ஆதரவாக 100 எம்.எல்.ஏக்களும் மேல் இருக்கிறார்கள். இனிமேல்தான் அதிசயங்கள் நிகழப் போவதைப் பார்க்கப்போகிறீர்கள் என்று கூறிய நாஞ்சில் சம்பத், உங்களுக்கு இனி நன்றாக பொழுது போகும் என்று செய்தியாளர்களைப் பார்த்து கூறினார்.
செய்தி சேகரிப்பு பொழுது போக்கா?
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவரது மரணம் வரையிலும், கூவத்தூர் கூத்துக்கள், தமிழக அரசியல் நிகழ்வுகளை உண்ணாமல், உறங்காமல் செய்தி சேகரித்து மக்களுக்கு அளிக்கும் செய்தியாளர்களுக்கு இது பொழுது போக்கா நாஞ்சில் சம்பத். அரசியல்வாதிகளின் வேடிக்கையால் அல்லல் படுவது செய்தியாளர்கள்தான் என்பதை உணர்ந்து கொள்வாரா நாஞ்சில் சம்பத்.