ஓ. சாமியோ.. நீங்களும், அம்மாவும் நீடூழி வாழ்க சாமியோ... நரிக்குறவர்களின் வாழ்த்தைப் பெற்ற காமராஜ்
கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர் இன மாணவ, மாணவிகள், அரசுத்தேர்வில் அரசு பள்ளியில் சாதனை படைத்த மாணவ, மாணவிகள் என 52 நபர்களுக்கு தனது 48, 49, 50 வது மாத சம்பளத்தொகைகளை கொடுத்துள்ளார் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தனி தொகுதியில் கடந்த 2011 ம் ஆண்டில் அ.தி.மு.க வில் நின்று பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் எஸ்.காமராஜ்.

இவர் எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து தீ விபத்தால் பாதிகப்பட்டவர்கள், பம்பை வாசிப்பவர்கள், திருநங்கைகள் கோயில் கட்டுவதற்கு, எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள், நரிக்குறவர்கள் என ஏராளமான நபர்களுக்கு இதுவரை தனது மாத சம்பளத்தொகையை அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பெயரில் வழங்கி வந்தார்.
இந்நிலையில் ஜெ வின் தீர்ப்பு மற்றும் பதவிப்பிராமணம் என பல்வேறு காரணங்களால் தள்ளிப்போட்டு வந்த அவரது சம்பளத்தொகையை 48, 49, 50 என மூன்று மாதச் சம்பளத் தொகையை ரூ 1 லட்சத்து 65 ஆயிரம் என 52 மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
இதில் நடந்து முடிந்த அரசுப் பொதுத்தேர்வில் 10 மற்றும் 12 ம் வகுப்பில் கரூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்த முதல் மூன்று இடங்களை பிடித்த குளித்தலையை சார்ந்த முதலிடம் பிடித்த கிருத்திகாவிற்கு ரூ 15 ஆயிரமும், அதே பகுதியில் அரசுப் பள்ளியில் இரண்டாவது இடம் பிடித்த சர்மிளாவிற்கு ரூ 6 ஆயிரமும், மூன்றாம் இடம் பிடித்த கோகிலாவிற்கு ரூ 5 ஆயிரமும் வழங்கினார்.
அதே போல் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த ரெங்கநாதம் பேட்டையை சார்ந்த வினிதாவிற்கு ரூ 10 ஆயிரமும் என அரசுப்பள்ளியில் படித்த 14 மாணவ, மாணவிகளுக்கு ரூ 82 ஆயிரமும், இதே போல் தனியார் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த மாணவ, மாணவிகள், நரிக்குறவர் இன மாணவ, மாணவிகள் என மொத்தம் 52 பேருக்கு ரூ 1 லட்சத்து 65 ஆயிரம் பணத்தை தனது மாத சம்பளத்தொகையாக முதல்வர் ஜெயலலிதா பெயரில் தானமாக கொடுத்தார்.

கரூர் அருகே உள்ள காந்திகிராமம் பகுதியில் உள்ள கிருஷ்ண்ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி கல்வி உதவி பெறும் நிகழ்ச்சியாக நடந்தது. மேலும் கல்வி நிதியுதவி பெற்ற நரிக்குறவ இன மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் ஓ சாமியோ, நீங்கள் கொடுத்த இந்த சம்பளத் தொகைக்கு நீங்களும், உங்கள் கட்சியும், உங்க அம்மாவும் நீடூழி வாழ்க என கோஷமிட்டனர். மேலும் அவர்கள் எம்.எல்.ஏ வுக்கு ருத்ராட்சை மாலையை பரிசாக அளிக்க அதை எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் பெற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications