காங்.சின் ஆறுதல் பரிசும் 'கை' நழுவியது... புதுவையை கைப்பற்றியது என்.ஆர்.காங்கிரஸ்
புதுவை: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 60 ஆயிரம் வாக்குகள்வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
16வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்கள் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி மே 12ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 543 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 8,251 வேட்பாளர்கள் களமிறங்கினர். அதன்படி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு கடந்த மாதம் 24ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
புதுவையில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, திமுக, பாமக ஆகிய கட்சிகள் இடையே ஐந்து முனைப் போட்டி நிலவியது.
தமிழகத்தில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, புதுவையில் வேட்பாளரை நிறுத்தியது. அதேவேளையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் பாஜக கூட்டணியில் இருப்பதாகக் கூறி வேட்பாளரை அறிவித்தது. என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாமக இடையே நிலவிய போட்டியால் கூட்டணியில் குழப்பம் உண்டானது. நான்கு முனைப் போட்டி, ஐந்து முனைப் போட்டியாக மாறியது.
இதனால், மத்திய அமைச்சர் நாராயண சாமி காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டார். கடந்த 2004ம் ஆண்டு முதல் புதுவைத் தொகுதி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக பதவி வகித்து வருகிறார்.
ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையில் நாராயணசாமியின் கை ஓங்கி இருந்தது. இது காங்கிரசிற்கு சற்று ஆறுதலைத் தரும் வெற்றியாக அமையும் என எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால், புதுச்சேரியில் 4 தொகுதிகளான புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. மாலை 4.30 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 2,55,826 வாக்குகள் எடுத்து வென்றார். நாராயணசாமி 1,94,972 வாக்குகள் எடுத்தார்.
இதையடுத்து 60 ஆயிரத்து 854 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். 3வது இடத்தை அதிமுக வேட்பாளர் ஓமலிங்கம் பிடித்தார். இவர். 1,32657 வாக்குகள் பெற்றார். இதில் காங்கிரஸ், அதிமுக தவிர தேர்தலில் போட்டியிட இதர 27 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
4வது இடத்தை திமுக வேட்பாளர் நாஜிமும், 5வது இடத்தை பாமக வேட்பாளர் அனந்தராமனும் பிடித்தனர். ஆறாவது இடத்தை நோட்டா பிடித்தது. 22,268 வாக்குகள் நோட்டாவில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.