கைது செய்யப்பட்ட சசிகலா கணவர் நடராஜன் நள்ளிரவில் கோர்ட்டில் ஆஜர்- புழல் சிறையில் அடைப்பு!!
சென்னை: கராத்தே வீரர் ஹூசைனியை மிரட்டிய புகாரின் பேரில் குற்றாலத்தில் கைது செய்யப்பட்ட, முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் எம். நடராஜன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிற்பங்கள், சிலைகள் செய்து தருவதற்காக சசிகலாவின் கணவர் எம். நடராஜன், கராத்தே வீரர் ஹுசைனிக்கு பணம் கொடுத்துள்ளார். ஆனால் ஒப்புக்கொண்டவாறு ஹுசைனி சிலைகளை செய்து தராததால் பணத்தை திருப்பித் தருமாறு நடராஜன் தரப்பினர் கேட்டிருக்கின்றனர்.
இது தொடர்பாக போலீசில் ஹூசைனி மீது சென்னை போலீசில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஹூசைனியும் தமது பங்குக்கு ஒரு புகார் கொடுத்தார், சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜை நேரில் சந்தித்த அவர், நடராஜன் தனது இல்லத்திற்கு வரவழைத்து ஹுசைனியை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக புகார் மனு கொடுத்தார்.
அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருவான்மியூர் போலீசார் குற்றாலத்தில் நடராஜனை நேற்று காலையில் கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நள்ளிரவில் நடராஜன் ஆஜர் செய்தனர்.
நடராஜனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.