நமது அம்மாவில் ம. நடராஜன் மரணச் செய்தி... பட்டும் படாமலும்
சசிகலா கணவர் நடராஜன் மறைவு பற்றி நமது அம்மா நாளிதழில் பட்டும் படாமலும் செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை: நடராஜன் மறைவுக்கு முதல்வர், துணைமுதல்வர் இரங்கல் கூறவில்லை. அமைச்சர்கள் யாரும் அஞ்சலி செலுத்தவில்லை. அதே நேரத்தில் நமது அம்மா நாளிதழில் பட்டும் படாமலும் செய்தி வெளியாகியுள்ளது.
புதியபார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான நடராஜன் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர். டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தவிர சில எம்எல்ஏக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
முதல்வர், துணைமுதல்வர் யாரும் இரங்கல் தெரிவிக்கவில்லை. அமைச்சர்கள் யாரும் அஞ்சலி செலுத்த செல்லவில்லை. இது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், சசிகலா குடும்பத்தினருடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று முடிவெடுத்தபின் நடராஜன் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டர்கள் என்று கூறினார்.
அம்மாவே ஒதுக்கி வைத்து விட்டார். அதன் பிறகு நாங்கள் எப்படி போவது. இந்த கேள்வியே தேவையில்லாதது. ஒட்டு மொத்த மக்களின் எண்ணமும் அதுதான் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
நடராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காத நிலையிலும் நடராஜன் மறைவு பற்றி அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழ் 4வது பக்கத்தில் பட்டும் படாமலும் ஒரு சிறிய செய்தியை வெளியிட்டுள்ளது.