செயற்கை சுவாசத்தில் நடராஜன்... கணவரை காண பரோலில் வந்த சசிகலா - வீடியோ
கணவரை காண சசிகலா வந்துள்ள நிலையில் நடராஜன் கவலைக்கிடமான நிலையில் செயற்கை சுவாசத்தில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்
சென்னை: கணவரை கவனித்துக்கொள்ள சசிகலா பரோலில் வந்துள்ள நிலையில், செயற்கை சுவாசத்தில் சிகிச்சை பெற்று வருகிறார் ம. நடராஜன்.
சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த மாதம் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவரது சிறுநீரகமும், கல்லீரலும் செயல் இழந்தது தெரிய வந்தது. எனவே அவருக்கு மாற்று சிறுநீரகம், கல்லீரல் பொருத்தினால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறினார்கள்.
இதையடுத்து விபத்தில் மூளைச்சாவு அடைந்த அறந்தாங்கி வாலிபர் கார்த்திக்கின் சிறுநீரகம், கல்லீரல் தானமாக பெறப்பட்டு நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
மருத்துவர்களின் கண்காணிப்பில் நடராஜன்
அறுவை சிகிச்சைக்குப் பின் நடராஜன் மிக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து உடல் நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். வெண்டிலேட்டர் எனப்படும் உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் அவருக்கு உயர்ந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை முடிந்து 48 மணி நேரத்துக்குப்பின் நடராஜன் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும், சிறுநீரகம், கல்லீரல் சீராக இயங்குகிறது என்றும் குளோபல் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
செயற்கை சுவாசத்தில் நடராஜன்
பெறப்பட்ட சிறுநீரகம், கல்லீரலை நடராஜன் உடல் ஏற்றுக் கொண்டு விட்டது. மூச்சுக் குழாயில் துளையிடப்பட்டு குழாய் மூலம் வெண்டி லேட்டருடன் இணைக்கப் பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. இன்னும் சில வாரங்களுக்கு அவரது உடல் நிலை நன்கு தேறும் வரை வெண்டிலேட்டருடன் கூடிய சிகிச்சை நீடிக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் தங்கிய சசிகலா
கணவரின் உடல்நிலையை காரணம் காட்டி சசிகலா 5 நாட்கள் பரோலில் வந்துள்ளார் சசிகலா. பெங்களுரு சிறையில் இருந்து நேற்று பரோலில் விடுவிக்கப்பட்ட சசிகலா, இரவே சென்னை வந்தார். தி. நகரில் கிருஷ்ணபிரியாவின் வீட்டில் தங்கியிருக்கிறார் சசிகலா.
கணவரை காண சென்ற சசிகலா
தி. நகர் வீட்டில் இருந்து நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ள சசிகலா, அங்கு மாலை வரை தங்கியிருந்து கணவரை கவனிப்பார் என்று கூறப்படுகிறது. அக்டோபர் 11ஆம் தேதிவரை சசிகலாவிற்கு பரோல் அளிக்கப்பட்டுள்ளது. பரோல் முடிந்து மீண்டும் பெங்களூரு சிறைக்கு செல்வார் சசிகலா.