அதிமுகவை சசிகலாவிடம் இருந்து ஓபிஎஸ் மீட்டெடுப்பார்.. நத்தம் விஸ்வநாதன் நம்பிக்கை !
கட்சியையும் ஆட்சியையும் சசிகலாவிடம் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மீட்டெடுப்பார் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
திண்டுக்கல்: அதிமுக யாரிடம் செல்லக்கூடாது என்று ஜெயலலிதா நினைத்தார்களோ அது இன்றைக்கு நடந்து விட்டது. இருப்பினும் கட்சியையும் ஆட்சியையும் சசிகலாவிடம் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மீட்டெடுப்பார் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்தார்.
சசிகலாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த பிறகு சமூக வலைத்தளங்களில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இளைஞர்கள், பொதுமக்கள், அதிமுக தொண்டர்களின் ஆதரவு பெருகி வருகிறது.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுமக்கள் அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எம்எல்ஏக்கள் ஆதரவுடன் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் தொகுதி பக்கமே செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து கட்சியும் கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இருப்பதால் மக்களிடம் நியாயம் கேட்க உள்ளதாக ஓபிஎஸ் அறிவித்தார். இதனிடையே ஓபிஎஸ் அணியினர் தொண்டர்களுடன் ஆலோசனை கூட்டங்களும் நடத்தி வருகின்றனர். மேலும் ஜெயலலிதா மரணத்திற்கு நீதிகேட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் எனவும் ஓபிஎஸ் அணியினர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பழனியில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக எம்.எல் ஏ க்கள் சசிகலாவிடவிடம் விலை போயிவிட்டார்கள் எந்த எம்.எல்.ஏக்களும் போலீஸ் பாதுகாப்பு இன்றி தங்களது தொகுதிக்குள் செல்லமுடியாது நிலை உள்ளது
சசிகலா எனக்கு உதவியாளர் மட்டும் தான் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார் என்றும் தனது சொத்துக்கள் அனைத்தும் கட்சிக்குத்தான் சொந்தம் என்றும் ஜெயலலிதா கூறியதாக நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
மேலும் கட்சி யாரிடம் செல்லக்கூடாது என்று ஜெயலலிதா நினைத்தார்களோ அதற்கு மாறாக இன்றைக்கு நடந்து விட்டது. இருப்பினும் கட்சியையும் ஆட்சியையும் சசிகலாவிடம் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மீட்டெடுப்பார் என்றார்.