ஜெயலலிதா பொறுப்பற்ற முதல்வர்... மோடியால் காங்கிரசுக்கு ஆபத்து: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
மதுரை: பிரதமர் நரேந்திர மோடியின் தொடர் பழிவாங்கும் நடவடிக்கைகளால், காங்கிரஸ் கட்சி ஆபத்தில் உள்ளது என்று தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தொடர்ந்த வழக்கில் இருவரும் இன்று ஆஜராகின்றனர். இந்த நிலையில் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது போடப்பட்ட பொய்யான வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய இளங்கோவன், பிரதமர் நரேந்திர மோடியின் தொடர் பழிவாங்கும் நடவடிக்கைகளால், காங்கிரஸ் கட்சி ஆபத்தில் உள்ளது என கூறினார். மேலும் அவர், மோடி பலநாட்கள் வெளிநாட்டிலும், சில நாட்கள் இந்தியாவிலும் இருக்கிறார்.
இந்தியாவில் இருக்கும் அந்த சில நாட்களிலும் மக்கள் நலப்பணி குறித்து சிந்திக்காமல், காங்கிரஸ் கட்சியை அழிக்கும் நடவடிக்கைகளிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
அரசியலை மூலதனமாக கொண்டு சம்பாதித்தவர்களுக்கு மத்தியில், நாட்டிற்காக தமது சொத்துக்களையே இழந்தவர்கள் நேரு குடும்பத்தினர். அத்தகைய நேரு குடும்பத்தை சேர்ந்தவர்களை பற்றி பேச மோடிக்கு தகுதி இல்லை என்றார்.
தொடர்ந்து பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக தமிழக அரசை குற்றம் சாட்டினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா பொறுப்பற்றவராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.












Click it and Unblock the Notifications