சட்டசபை தேர்தலிலும் பாஜக கூட்டணி தொடரும்; அதிமுகவையும் மக்கள் ஓரம் கட்டுவார்கள்: அன்புமணி
தருமபுரி: தமிழக சட்டசபை தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்று பாமகவின் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
பாஜக கூட்டணியில் இடம்பெற்று நடைபெற்று, முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் வெற்றி பெற்ற அன்புமணி ராமதாஸ், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தருமபுரி மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தருமபுரி மாவட்டம் வளர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சி வேறுபாடு, ஜாதி வேறுபாடு பார்க்காமல் மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர்.
என்மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் நிறைவேற்றுவேன். தருமபுரிக்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகத்து வளர்ச்சிக்காகவும் நானும், கன்னியாகுமரியில் வெற்றி பெற்றுள்ள பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணனும் இணைந்து செயலாற்றுவோம். இதைவிட பெறிய வெற்றியை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் கிடைக்கவில்லை. அதே நேரம் திமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இனிமேல் திமுகவை மக்கள் ஏற்கமாட்டார்கள். அதிமுக, திமுக தயவு இல்லாமல் தமிழகத்தில் இரண்டு இடங்களை பிடித்துள்ளது வரலாற்று சாதனை.நரேந்திரமோடி யாருடைய தயவும் இல்லாமல் ஆட்சியமைக்க போகிறார். அவரோது நாங்களும் சேர்ந்து தமிழகத்துக்கு நல்ல திட்டங்களை கொண்டு வருவோம். அதிமுக 37 தொகுதிகளை பெற்றிருந்தாலும் அதனால் எந்த பிரயோஜனும் கிடையாது. அடுத்த சட்டசபை தேர்தலில் இதே கூட்டணி தொடரும். இப்போது திமுகவை மக்கள் ஓரம்கட்டியதுபோல அப்போது அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையும் மக்கள் ஒதுக்கிவிடுவார்கள். இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.