தே.ஜ.கூ. சார்பில் முதல்வர் வேட்பாளரை நிறுத்தப் போவதாக தமிழிசை அறிவிப்பு!
சென்னை: இதுவரை முதல்வர் வேட்பாளர் குறித்து பூடகமாக பேசி வந்த தமிழக பாஜக தற்போது தேசிய ஜனநாயக்க கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளரை அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் அது விலகிப் போகும் விஜயகாந்த்துக்கு வலை வீசுகிறதோ என்ற எண்ணம் எழுந்துள்ளது.
பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே தமிழகத்தில் மிகப் பெரிய நாடகத்தை நடத்தி வருகின்றன ஜெயலலிதா விவகாரத்தை முன்னிறுத்தி. இந்த நாடகம் எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.
வருகிற சட்டசபைத் தேர்தலில் பலமான கூட்டணியை அமைத்து முடிந்தவரை லாபம் பார்க்க அத்தனைக் கட்சிகளுமே ஆர்வமாக உள்ளன. இதில் எந்தக் கட்சிக்கு மக்கள் லக்கி பிரைஸ் கொடுக்கப் போகிறார்கள் என்பதுதான் விடை தெரியாத கேள்வியாக தொடர்கிறது.
இந்த நிலையில் வருகிற சட்டசபைத் தேர்தல் குறித்து தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் சில தகவல்களை வெளியிட்டுள்ளார் ஒரு பேட்டியின் மூலமாக.. அந்தப் பேட்டியிலிருந்து...

40 லட்சம் உறுப்பினர்கள்
தமிழகத்தில் பாஜகவுக்கு இதுவரை 40 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கும் பணி நடந்து வருகிறது.

பாஜக முதலாண்டு
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்று, வரும் 26-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. அதை தமிழகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாட உள்ளோம். 100 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

2 இடங்களில் பொதுக்கூட்டம்
முதல் கூட்டம் சென்னையிலோ, அதன் சுற்றுவட்டார பகுதியிலோ வரும் 28-ந் தேதி நடைபெற உள்ளது. இதில், மத்திய அமைச்சர் ஒருவர் பங்கேற்று பேசுகிறார். தமிழகத்தில் தென் பகுதியில் நடைபெறும் கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் முரளிதரராவ், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

சாதனை விளக்க கண்காட்சி
முன்னதாக, வரும் 26-ந் தேதி சென்னை கமலாலயத்தில், பா.ஜ.க. அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் கண்காட்சி நடைபெற இருக்கிறது. மறுநாள் பிரதமர் நரேந்திரமோடியின் ‘தூய்மை இந்தியா' திட்டம் குறித்த பிரசார வாகனமும் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. மேலும், பா.ஜ.க. அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி 60 லட்சம் புத்தகங்கள் அச்சடித்து தமிழகம் முழுவதும் விநியோகிக்க உள்ளோம்.

காங்கிரஸும், அதிமுகவும் நெருக்குகின்றனவா?
இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தான் பதில் அளிக்க வேண்டும். ஜெயலலிதா வழக்கில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு கர்நாடக அரசுக்குக்கு (காங்கிரஸ் அரசு) உள்ளது. எனவே, அவரிடம் இருந்து இதற்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

அமைச்சர்கள் வருகை ஒத்திவைப்பு ஏன்?
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, பா.ஜ.க. ஆட்சியின் ஒரு ஆண்டு கொண்டாட்டம், நாடாளுமன்றம் கூடுதலாக 3 நாட்கள் நடந்தது போன்ற சூழ்நிலைகளால் தான், தமிழகத்திற்கு மத்திய அமைச்சர்கள் வரவில்லை. விரைவில் அவர்கள் வருவார்கள். தமிழக மக்கள் பிரச்சினை கவனிக்கப்படும். தமிழக மக்கள் மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்தும்.

சட்டசபைத் தேர்தல் வியூகம்
இப்போது கட்சியில் அடிப்படை உறுப்பினர்களை சேர்ப்பதில்தான் கவனத்தை செலுத்தி வருகிறோம். சட்டமன்ற தொகுதி வாரியாக மாநாடு நடத்த உள்ளோம். தமிழகத்தில் பா.ஜ.க. வளர்வதற்கான நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது.

கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளர்
சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளர் நிறுத்தப்படுவார். தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவெடுத்து பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார் தமிழிசை.












Click it and Unblock the Notifications