வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ஜெயலலிதா படுத்திய பாடு… நினைவூட்டிய வைகோ
கிருஷ்ணகிரி: வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ஆதரவு கொடுத்த ஜெயலலிதா, படுத்திய படுத்திய பாட்டை பாஜக மறந்து விடுமா? என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவில் அதிமுகவிற்கு இடம் கிடையாது. அவர்கள் தனித்தே வெற்றி பெற்று ஆட்சியமைப்பார்கள் என்றும் வைகோ கூறியுள்ளார்.
நாடு முழுவதும் வீசும் மோடி அலையால் பாஜக தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்றும் வைகோ கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த பா.ம.க. வேட்பாளர் ஜி.கே.மணியை ஆதரித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஞாயிறன்று கிருஷ்ணகிரி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டார்.
ஓசூரில் பிரசாரத்தை தொடங்கிய வைகோ, சூளகிரி, கிருஷ்ணகிரி, பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றபடி மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அம்பேத்கர் சிலைக்கு மரியாதை
வைகோ மற்றும் பா.ம.க. வேட்பாளரும், மாநில தலைவருமான ஜி.கே.மணி ஆகியோர் கிருஷ்ணகிரி தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே நடந்த பிரசாரத்தின் போது வைகோ பேசியதாவது.
மோடி அலை
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நரேந்திரமோடி 16ம் தேதி கிருஷ்ணகிரி வருகை தந்து பிரசாரம் செய்ய உள்ளார். நாடு முழுவதும் வீசும் மோடி அலையால், பா.ஜனதா கட்சி 272 தொகுதிகளில் தனித்தே வெற்றி பெறும்.
320 இடங்கள் வெல்லும்
அதன் கூட்டணி கட்சிகளையும் சேர்த்து 320 தொகுதிகளில் வெற்று பெற்று மோடி பிரதமராவது உறுதி. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நமது கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
நதிநீர் பிரச்சினை
காரணம், காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகம் நம்மை வஞ்சிக்கிறது. பாலாறு விவகாரத்தில் ஆந்திராவும், முல்லைப்பெரியாற்றை உடைக்க கேரளாவும் திட்டம் தீட்டி காத்துக்கொண்டிருக்கிறது.
மீனவர்கள் பிரச்சினை
கடலில் தமிழக மீனவர்கள் நாள்தோறும் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். இந்திய கடற்படையும், இலங்கை கடற்படையும் சேர்ந்து கொண்டு தமிழக மீனவர்களை சுட்டு தள்ளுகிறார்கள்.
40 தொகுதிகளிலும் வெற்றி
தமிழக மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் மோடி ஆட்சி சரி செய்யும். அதற்கு நாம் 39 தொகுதிகளிலும் வென்று நமது பலத்தை காண்பிக்க வேண்டும்.
ஜெ. பிரதமரா?
நமது முதல்வர் ஜெயலலிதா சமீபகாலமாக வித்தியாசமாக வருகிறார். இந்த முறை டெல்லி வாய்ப்பு உங்களுக்கு அல்ல. அவரது அமைச்சர்கள் அவர்தான் பிரதமர் என்கிறார்கள். எந்த நாட்டுக்கு ஜெயலலிதா பிரதமராக போகிறார்?
பாஜகவில் இடமில்லை
இப்போது மத்தியில் அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் அரசு என்கிறார். எந்த கட்சியுடன் அங்கம் வகிக்க போகிறார். வாஜ்பாயை படுத்திய பாட்டை பா.ஜனதா மறந்து விடுமா? உங்களுக்கு பாஜகவில் இடம் கிடையாது.
கருணாநிதி வேஷம்
அவர்கள் தனித்தே வெற்றி பெறுவார்கள். கருணாநிதி திடீரென மோடி எனது நெருங்கிய நண்பர் என்றார். முஸ்லிம் அமைப்புகளின் நெருக்கடியால் மோடி பிரதமராக முடியாது என்றார் வைகோ.