தாமிரபரணியில் வெள்ள அபாயம்.. தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு
நெல்லை: தாமிரபரணியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இருப்பினும் எந்தவிதமான சூழலையும் சமாளிக்கும் வகையில், பாதுகாப்பு கருதி 5 கம்பெனி பேரிடர் மீ்ட்பு குழுவினர் நெல்லைக்கு வந்து முகாமிட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி வழிகின்றன. இந்த இரண்டு அணைகளில் இருந்தும் 32 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணியில் 40 ஆயிரம் கன அடி நீர் ஓடியது. இந்த வெள்ள நீர் புன்னைகாயல் வழியாக மாலை கடலில் கலந்தது.
எனினும் வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 நாட்களுக்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை செய்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து சென்னை வெள்ள மீட்பு பணிகளுக்காக வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் உதவி கமாண்டர் குமார் ராகவேந்திரா தலைமையில் நெல்லை வந்துள்ளனர்.
இவர்களில் 5 கம்பெனி படையினர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2 கம்பெனி அடங்கிய 70 பேர் நெல்லை பொறியியல் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பேரிடர் மீட்பு குழுவினர் ஜெனரேட்டர், படகுகள், பெரிய மரங்களை அறுக்க பயன்படும் வாள்கள், துடுப்பு படகுகள், எலக்ட்ரிக் வயர்கள், மோட்டர் என்ஜின்கள் உள்பட ஏராளமான உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

வெள்ளம் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு செல்ல அவர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு்ளளனர். இதுகுறித்து உதவி கமாண்டெண்ட் குமார் ராகவேந்திரா கூறுகையில், நாங்கள் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து சென்னை மீட்பு பணிக்காக வந்தோம். மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து மீட்பு பணிகளை செய்தோம். தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்த நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை தொடர்ந்து வெள்ளம் பாய்ந்து செல்வதால் மீட்பு பணிக்காக வந்துள்ளோம். நாங்கள் தொடர்ந்து 4 நாட்கள் வரை இங்கு இருந்து நிலைமையை கண்காணிப்போம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications