மணப்பாறை மாணவிகள் மர்ம மரணத்துக்கு பின்னணியில் தலைமையாசிரியர், மாணவர்கள்?
திருச்சி அருகே பள்ளி மாணவிகள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் தலைமையாசிரியர் மற்றும் 2 மாணவர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி: பள்ளி மாணவிகள் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் பள்ளி தலைமையாசிரியருக்கும் அப்பள்ளியின் 10ஆம் வகுப்பு மாணவர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சரளப்பட்டியை சேர்ந்த ரதிதேவி மற்றும் வைரம்பட்டியை சேர்ந்த செல்வி ஆகியோர் வையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மாணவிகள் இருவரும் நேற்று வீடு திரும்பவில்லை.
இதையடுத்து மாணவிகள் மாயமானது குறித்து பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து பெற்றோரும், காவல்துறையினரும் தேடி வந்தனர்.
கடிதத்தை கைப்பற்றிய தலைமையாசிரியர்
இந்நிலையில் இன்று காலை தட்டாரப்பட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தில் மாணவிகள் இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். விஷயம் கேள்விப்பட்டவுடன் சம்பவ இடத்திற்கு வந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகேசன், மாணவியின் உடலை பார்க்க செல்லாமல் அருகில் வேறு ஏதேனும் பொருள் கிடக்கிறதா என பார்த்துவிட்டு மாணவியின் பையில் இருந்து கடிதத்தை எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது.
மாணவர்கள் 2 பேர் கைது
இதைத்தொடர்ந்து மாணவிகளின் உயிரிழப்புக்கு காரணமாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விசாரணையை துரிதப்படுத்திய போலீசார் மாணவிகள் எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரித்தனர். கடிதத்தில் குறிப்பிட்டிருந்த சண்முக பாண்டியன், விக்னேஷ்வரன் ஆகிய மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சுவரில் தவறாக எழுதப்பட்டது
அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே 2 மாணவர்களும் பள்ளிக்கூட சுவற்றில் 2 மாணவிகளை பற்றியும் தவறாக எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாணவிகள் குறித்து தரக்குறைவாகவும் பேசியதாகவும் தெரிகிறது.
கண்டுகொள்ளாத தலைமையாசிரியர்
இதுகுறித்து தலைமையாசிரியரிடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே மாணவிகள் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.