அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை மு.க. ஸ்டாலின் பார்க்கப் போன நாள் இன்று!
ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தி சிகிச்சை செய்யப்படுவதாக கடந்த ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி அப்போலோ அறிக்கை வெளியிட்ட நிலையில் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து சென்றார் ஸ்டாலின்.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு இதே நாளில் அபாயகட்டத்தில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதாவை காண செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தது மிகப்பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
செப்டம்பர் 22ஆம் தேதியன்று அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு என்னவாயிற்றோ ஏதாயிற்றோ என்று பதறிக்கொண்டிருந்தனர் மக்கள். அப்பல்லோ அறிக்கையையும், செய்தி தொடர்பாளர்களின் பேச்சையும் மட்டுமே நம்பிக்கொண்டிருந்தனர் அதிமுகவினர்.
இந்து ஆங்கில நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி, தன்னுடைய ட்வீட்டரில் ஒரு செய்தியை பதிவிட்டார். அதில், "முதலமைச்சர் ஜெயலலிதா அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டார்" என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால், அதுவரை முதலமைச்சர் ஜெயலலிதா அபாயகட்டத்தில் இருந்தார் என்பதே யாருக்கும் தெரியாது.
மாலினி பார்த்தசாரதியின் ட்வீட்டுக்குப் பிறகுதான், ஜெயலலிதா அபாயகட்டத்தில் இருந்தார் என்பதே தமிழகத்துக்குப் புரிந்தது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள்
எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதாவின் உடல்நிலையைப் பரிசோதிக்க, அக்டோபர் 5ஆம் தேதி, 3 மருத்துவர்கள் வந்தனர். அவர்களில் டாக்டர் கில்நானி நுரையீரல் சிறப்பு மருத்துவர். டாக்டர் அஞ்சன் டிரிக்கா மயக்கவியல் துறை சிறப்பு நிபுணர். டாக்டர் நிதிஷ்நாயக், இதயநோய் சிறப்பு மருத்துவர். இத்தனை டாக்டர்களின் வருகைக்குப் பிறகே ஜெயலலிதாவின் உடல்நிலை அபாயகட்டத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

வில்லங்கமாக அறிக்கை விட்ட அப்பல்லோ
அக்டோபர் 6ஆம் தேதி, அப்போலோ மருத்துவமனையில் இருந்து வெளியான அறிக்கை கொஞ்சம் வில்லங்கமாக இருந்தது. அதில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் பிரச்னை, செயற்கை சுவாசம் அளிக்கப்படுவது, நோய்த் தொற்றுப் பிரச்னைகள் இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருந்தன. பாசிவ் பிசியோதேரபி அளிக்கபடுகிறது என்று சொல்லப்பட்டது.

சு.சாமியின் வில்லங்க கடிதம்
சுப்பிரமணிய சாமி, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவர் எப்போது குணம்பெற்றுத் திரும்புவார் எனத் தெரியவில்லை. அதனால், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு கடிதம் எழுதினார்.

அப்பல்லோ வந்த ராகுல்காந்தி
மத்திய அரசுக்கு செக் வைக்க நினைத்த ராகுல் காந்தி, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அப்போலோ வந்தார். பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராகுல், எங்களின் ஆதரவு அதிமுகவிற்கு உண்டு என்று உறுதியாக சொன்னார் ராகுல்காந்தி.

அப்பல்லோ வந்த வெங்கையா
அக்டோபர் 10ஆம் தேதி, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவை அனுப்பி சமாதானக் கொடியைக் காட்டியது. அப்போலோவுக்கு வந்த அவர், ஆளுநரையும் சந்தித்தார். ஜெயலலிதாவின் உடல்நிலையை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இல்லை. அவர்கள் கேட்பதை செய்து கொடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார்.

பிசியோதெரபி சிகிச்சைகள்
ஜெயலலிதா உடல் நிலை குறித்து அக்டோபர் 10ல் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் முதல்வர் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். தேவைப்படும், செயற்கை சுவாச உதவி, ஆன்டிபயோடிக்ஸ், ஊட்டச்சத்து சப்ளை, உதவிகரமான தெரபி மற்றும் பிசியோதெரபி சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அறிக்கை விட்ட அப்பல்லோ
எய்ம்ஸ் பேராசிரியர், டாக்டர். ஜி.கில்நானி, அக்டோபர் 9ம் தேதி மற்றும் 10ம் தேதிகளில் அப்பல்லோவுக்கு மீண்டும் வருகை தந்து, முதல்வரின் உடல்நிலையை பரிசோதித்தார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

நலம் விசாரித்த மு.க. ஸ்டாலின்
ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தி சிகிச்சை செய்யப்படுவதாக அப்போலோ அறிக்கை வெளியிட்ட அதே நாளில் மருத்துவமனைக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தது அதிமுகவினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications