முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா: போலீஸ் அனுமதி கோரி பழ.நெடுமாறன் வழக்கு

பழ.நெடுமாறன் தாக்கல் செய்துள்ள மனுவில், கூறியுள்ளதாவது:
"2009 மே மாதம் இலங்கையில் நடந்த இனப் படுகொலையை நினைவுபடுத்தும் விதமாக தஞ்சாவூர் அருகே வாலூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முற்றம் என்பது இனப் படுகொலையை சித்திரிக்கும் நினைவுச் சின்னமாகும். போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலையைச் சித்திரிக்கும் சிலைகள் மற்றும் தமிழன்னை சிலை ஆகியவை அதில் அடங்கியுள்ளன.
தனியார் பட்டா நிலத்தை வாங்கி அதில் இந்த முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிராம ஊராட்சியின் அனுமதி பெறப்பட்டுள்ளது. வரும் நவ.8 அல்லது நவம்பர் 9 அல்லது நவம்பர் 10 ஆகிய ஏதாவது ஒரு நாளில் திறப்பு விழா நடத்த திட்டமிட்டு உள்ளோம். இந்த விழாவை நடத்த மாவட்ட ஆட்சியரும் அனுமதி அளித்துள்ளார்.
திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. உலக நாடுகளில் இருந்து தலைவர்கள் பலர் இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர். விழாவில் கருத்தரங்கு, நாடகம், கலந்துரையாடல் ஆகியவை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா பந்தல் அமைப்பு மற்றும் ஒலி-ஒளி அமைப்பு போன்றவை தொடர்பாக அனுமதி அளிக்குமாறும் காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறும் தஞ்சை தாலுகா காவல்துறையினரிடம் அக்டோபர் 19ஆம் தேதி மனு அளித்தோம்.
ஆனால், காவல்துறை பதில் அளிக்கவில்லை. இதனால் அக்டோபர் 26ஆம் தேதி மறுபடியும் மனு அளித்தும் பதில் இல்லை. எனவே, திறப்பு விழா தொடர்பான ஏற்பாடுகளுக்கு காவல்துறை அனுமதி அளிக்கவும் காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பழ.நெடுமாறன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயன் ஆஜராகி, காவல்துறையினர் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கக் கூடும் என்ற அச்சம் காரணமாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, காவல்துறையினர் உரிய அனுமதி அளிக்கவும் தேவையான பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்றார்.
இதற்கு அரசு வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் ஆஜராகி, அரசிடம் பதில் பெற்று தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். இதைடுத்து, அரசிடம் பதில் பெறுவதற்கு அரசு வழக்கறிஞருக்கு கால அவகாசம் அளித்து விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications