கேஸ் சிலிண்டரை எட்டி உதைத்து நெடுவாசல் பெண்கள் நூதனப் போராட்டம்!
'எங்களுக்கு கேஸ் சிலிண்டர் வேண்டாம். அதற்காகத்தானே எங்கள் மண்ணில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துகிறீர்கள்' என கூறி கேஸ் சிலிண்டரை எட்டி உதைக்கும் போராட்டத்தில் நெடுவாசல் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்
புதுக்கோட்டை: நெடுவாசலில் கேஸ் சிலிண்டரை எட்டி உதைக்கும் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டுள்ளது அக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் 92ஆவது நாளாக ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான இரண்டாம் கட்டம் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமுல்படுத்த முடியாது என தமிழக அமைச்சர்கள் கூறினாலும் நெடுவாசல் மக்கள் அமைச்சர்கள் வார்த்தைகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர்.
அதனால் தான் அம்மக்கள் 92ஆவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தில் அரசுக்கு எதிராக ஒரு போராட்டம் இத்தனை நாட்கள் நடத்தப்படும் துயரமும் இங்குதான் நடந்து வருகிறது. ஆனால், மத்திய அரசு இதுவரை தங்கள் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்கள், சமைப்பதற்கு கேஸ் சிலிண்டர் வேண்டும் என்று கூறித்தானே எங்கள் வாழ்க்கையை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எங்கள் மண்ணில் அனுமதிக்கிறீர்கள். எங்களுக்கு கேஸ் வேண்டாம். நாங்கள் வழக்கம் போல விறகைப் பயன்படுத்தியே சமைத்துக்கொள்கிறோம் என கூறி சமைத்தும் கேஸ் சிலிண்டரை எட்டி உதைத்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.