தமிழக மாணவர்களுக்கு இனி தமிழகத்தில்தான் நீட் தேர்வு மையம்.. மத்திய அமைச்சர் உறுதி!
தமிழக மாணவர்களுக்கு இனி தமிழகத்தில் தான் நீட் தேர்வு மையம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக மாணவர்களுக்கு இனி தமிழகத்தில் தான் நீட் தேர்வு மையம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் போது தமிழக மாணவர்களுக்கு கேரளா, குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் பெரும் அவதியடைந்தனர்.
நீட் தேர்வு மையங்கள்
இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சென்னை ஐஐடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதே மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத மையங்கள் அமைக்கப்படும்.
மொழிப்பெயர்ப்பாளர்கள்
தமிழக மாணவர்களுக்கு இனி வரும் காலங்களில் வெளி மாநிலங்களில் நீட் தேர்வு எழுத மையம் ஒதுக்கப்படாது. நீட் தேர்வு வினாத்தாளில் ஏற்படும் பிழைகளை தவிர்க்கும் வகையில் தமிழக அரசிடம் நல்ல மொழிப் பெயர்ப்பாளர்கள் கேட்கப்படுவார்கள் என்றார்.
மாவட்டத்தில் ஏற்பாடு
மாநில அரசின் பாடத்திட்டத்திலும் நீட் கேள்விகள் கேட்கப்படும். வரும் ஆண்டு முதல் மாணவர்கள் அவர்களுடைய மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும்.
கேந்திரிய வித்யாலயா
தேசிய கல்விக் கொள்கை விரைவில் கொண்டுவரப்படும். பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கொண்டுவரும் திட்டம் இல்லை. தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
ரூ.1 லட்சம் உதவி நிதி
திறமையான ஆராய்ச்சி மாணவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்க இந்தியாவிலேயே ஆய்வு கூட்டமைப்பு அமைக்கப்படும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் வரை உதவிநிதி வழங்கப்படும். இவ்வாறு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.