நீட் மரணங்கள்: தமிழர்களின் சாபம் ஆட்சியாளர்களை இனியும் விட்டு வைக்கக் கூடாது - கெளதமன்
நீட் மரணங்களால் தமிழர்களின் சாபம் ஆட்சியாளர்களை இனியும் விட்டு வைக்கப்படாது என்று இயக்குநர் கெளதமன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : நீட் தேர்வு எழுதுவதற்காகச் சென்ற மாணவனின் தந்தை எர்ணாகுளத்தில் உயிரிழந்து இருப்பது மிகவும் துயரமானது. தமிழர்களின் சாபம் மத்திய ஆட்சியாளர்களை இனியும் விட்டுவைக்காது என இயக்குநர் கெளதமன் தெரிவித்துள்ளார்.
திருத்துறைப்பூண்டியில் இருந்து நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்ற மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இயக்குநர் கெளதமன் பேசுகையில், இந்த மரணம் மிகவும் துயரமான செய்தி . இது தமிழகத்தின் மீதும், தமிழ் இனத்தின் மீதும் அறிவிக்கப்பட்டுள்ள போர். தமிழர்களை எந்த வழியிலாவது மத்திய அரசு அழிக்கப்பார்க்கிறது. அதற்கான எடுத்துக்காட்டுதான் இந்த மரணம்.
ஏற்கனவே தமிழக விவசாயிகள், மீனவர்கள் என படிப்படியாக வாழ்வாதரத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, அடுத்ததாக தமிழக மாணவர்களின் கல்வியில் கை வைத்துள்ளது. நீட் தேர்வுக்கான மையங்களை வெளிமாநிலங்களை அமைத்தும் அதில் ஒரு வகையான நடவடிக்கை ஆகும்.
பெட்ரோலிய மண்டலங்கள், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ மையங்களும், வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளும் அமைக்க முடிந்த மத்திய மாநில அரசுகளுக்கு ஏன் நீட் தேர்வு மையங்கள் அமைக்க முடியாதா ?
தொழில்நுட்பம் முன்னேறிவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மத்திய அரசு ஏன் இதை செயல்படுத்த முனையவில்லை? இது எல்லாம் தமிழக மக்களையும் ,மாணவர்களையும் எதிரிகளாக பார்க்கும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதிதான் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏற்கனவே நீட் எமனால் அனிதாவை இழந்தோம், தற்போது மாணவனின் தந்தை கிருஷ்ணசாமியை இழந்துள்ளோம். இன்னும் எத்தனை மரணங்களை மத்திய அரசு எதிர்பார்த்துகாத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், தமிழ் மக்களின் சாபம் இனியும் மத்திய, மாநில ஆட்சியாளர்களை விட்டு வைக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications