நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி தொழிலாளர்கள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படுத்த கோரி கடந்த 20 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இன்று 20 ஆவது நாளாக அவர்கள் வேலைக்கு செல்லவில்லை. மேலும் மறியல், முற்றுகை என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனிடையே தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர, 4 முறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. எனினும் உடன்பாடு ஏற்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.எனவே போராட்டங்களை தொடர்ந்து தீவிரப்படுத்துவது என தொ.மு.ச அண்ணா தொழிலாளர் ஊழியர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி கோரிக்கையை வலியுறுத்தி நெய்வேலி மெயின் பஜார் காமராஜர் சிலை அருகே தனி பந்தல் அமைத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதமிருந்து வருகின்றனர்.போராட்டத்துக்கு தொ.மு.ச பொதுச்செயலாளர் ராசவன்னியன் தலைமை தாங்கினார். அண்ணா தொழிலாளர் ஊழியர்கள் சங்க தலைவர் அபு, செயலாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்று போராட்டத்தை வாழ்த்தி பேசினர்.போராட்டத்தையொட்டி காமராஜர் சிலை பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இன்று மாலையில் உண்ணாவிரதம் முடிந்தவுடன் அடுத்த கட்ட போராட்டம் பற்றி தொழிற்சங்கத்தினர் முடிவு செய்து அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.என்.எல்.சி அனல்மின் நிலையத்தின் உற்பத்தி 2990 மெகாவாட். தொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்தத்தால் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. இன்று 2190 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. இது மொத்த மின் உற்பத்தியை விட 800 மெகாவாட் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.