நெல்லை மாணவர்கள் மட்டும் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றனர்
ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக நெல்லையில் 6 நாட்களாக போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று கடந்த 7 நாட்களாக உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பீட்டாவை தடை செய்ய வேண்டும், வாடி வாசல் திறக்கும் வரை வீடு வாசல் செல்ல மாட்டோம் என்று போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசே சட்டம் இயற்றலாம் என்று மத்திய அரசு கூறியதை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் பெற்று பின்னர் குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் நிரந்தர சட்டம் வேண்டும் என்றும் அதுவரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் டாக்டர்.ராஜசேகரன், காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் கார்த்திகேய சேனாபதி, ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஜல்லிக்கட்டுக்காக தொடர்ந்து போராடிவரும் ராஜேஷ் மற்றும் அம்பலத்தரசு ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
அவசர சட்டம் குறித்து முதல்வர் பன்னீர் செல்வம் கொடுத்த விளக்கம் திருப்திகரமாக இருந்தது என்று ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் டாக்டர். ராஜசேகரன் கூறினார். மாணவர்கள் மார்ச் 31ஆம் தேதி வரை போராட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்தார்.
மாணவர்களை போராட்டத்தை திரும்ப பெற சொல்ல உரிமை இல்லை என்றும், ஆனால் வேண்டுகோள் விடுப்பதாகவும் கார்த்திகேய சிவசேனாபதி கூறினார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த சில நிமிடங்களில் நெல்லையில் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மாணவர் அமைப்பினர் தெரிவித்தனர். நெல்லை வஉசி மைதானத்தில் கடந்த 6 நாட்களாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு நிரந்தர சட்டம் கொண்டு வருவதாக கூறிய உறுதி மொழியை ஏற்று போராட்டத்தை கைவிடுவதாக மாணவர் அமைப்பினர் தெரிவித்தனர்.
போராட்டம் திசைமாறி செல்வதாகவும், மாணவர் அமைப்பினரை வேண்டும் என்றே சிலர் தூண்டி விடுவதாகவும் கூறி போராட்டத்தை ஒத்திவைப்பதாக கூறியுள்ளனர். எனினும் மாணவர் அமைப்பினர் வாபஸ் முடிவுக்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடக போராட்டம் வாபஸ்
இதனிடையே நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட சமூக ஊடக குழுவினர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கூறியுள்ளனர். ஜல்லிக்கட்டு குழுவினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications