கலெக்டர் தடையையும் மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்கள்... நெல்லை மக்கள் அதிர்ச்சி!
நெல்லை: நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சில தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கூடுதல் கட்டணம் வசூலிக்க கலெக்டர் தடை விதித்திருந்தும் பஸ் நிர்வாகங்கள் அதை கண்டு கொள்ளவில்லை.
நெல்லை சந்திப்பு பகுதியிலிருந்து மேலப்பாளையத்திற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகி்ன்றன.
நெல்லை சந்திப்பிலிருந்து மேலப்பாளையத்திற்கு கொக்கிரகுளம், குறிச்சி, மருத்துவமனை செல்ல அரசு மற்றும் தனியார் பஸ்களில் ரூ.4 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக திடீரென டிக்கெட் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
அனுமதி பெற வேண்டும்...
தனியார் பஸ்களில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றால் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்று கட்டணத்தை உயர்த்த வேண்டும்.
புகார்...
ஆனால் தனியார் பஸ்கள் அதை செய்யாமல் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் செய்தனர்.
எச்சரிக்கை...
இந்நிலையில் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து மாநகர பகுதிகளில் இயக்கப்படும் தனியார் பஸ்களில் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டது.
அலட்சியமான பதில்...
ஆனால் நெல்லை சந்திப்பு மேலப்பாளையத்திலிருந்து இயக்கப்படும் தனியார் பஸ்சில் மட்டும் தற்போது ரூ.5 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இதுகுறித்து கண்டக்டரிடம் கேட்டபோது தனியார் பஸ் நிர்வாகத்திடம் சென்று கேளுங்கள் என அடாவடியாக கூறுவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications