களை கட்டிய பங்குனி உத்திரம் - குல தெய்வ கோயிலில் குவிந்த குடும்பங்கள்
நெல்லை: தமிழகத்தில் பங்குனி உத்திரம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தங்கள் குல தெய்வ கோயிலில் அனைத்து குடும்பத்தினரும் குவிந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத்தன்று அனைத்து சாஸ்தா கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக ஒவ்வொரு குடும்பத்தினரும் குல தெய்வமாக சாஸ்தாவை வழிபடுவது வழக்கம். இவர்கள் வெளி மாநிலத்தில் பணி புரிந்தாலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குடும்பத்துடன் ஒன்று சேருவர்.

தங்கள் குல தெய்வ சாமி அமைந்துள்ள கோயிலுக்கு சென்று பொங்கலிட்டு ஆடு, கோழி பலியிட்டு குலம் தலைக்க சிறப்பு வழிபாடு நடத்துவர். இத்தகைய பங்குனி உத்திரம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இரவே பல குடும்பத்தினர் குல தெய்வ கோயிலுக்கு சென்று முகாமிட்டுள்ளனர். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஆலங்குளம் மார்க்கெட்டுக்கு வாழைக்குலை வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் வாழைக்குலை விளைச்சல் அதிகரித்துள்ளது.
ஆலங்குளம் மார்க்கெட்டிற்கு சேரன்மகாதேவி, களக்காடு தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து வாழைக்குலைகள் வருகிறது. விளைச்சல் அதிகரிப்பால் வாழைக்குலைகள் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக குவிந்துள்ளன. கடந்த வருடத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
வாழைக்குலைகள் கடந்த வருடம் ரூ.150 விற்ற நாட்டு பழம் தற்போது ரூ. 100க்கும், கதலி ரூ. 100க்கு விற்றது ரூ. 30க்கும், ரூ. 300க்கு விற்ற செவ்வாழை ரூ. 200, ரூ. 200 விற்ற கோழி கூடு ரூ. 180, ரூ. 200 விற்ற கற்பூரவல்லி ரூ. 150க்கும் விற்பனையானது. ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரமான ஊத்துமலை, சங்கரன்கோவில், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்றனர்.












Click it and Unblock the Notifications