நெல்லை டவுனில் பயங்கரம்... பெண் சரமாரியாக வெட்டிப் படுகொலை!
திருநெல்வேலி: நெல்லை டவுனில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன் அம்மன் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி தாயம்மாள். வீட்டு வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் தாயம்மாள் வீட்டில் இருநது புறப்பட்டு பாரதியார் தெருவில் உள்ள ஒரு கடையில் தயிர் வாங்கி விட்டுத் திரும்பி கொண்டிருந்தார்.
அந்த இடம் வாகனப் போக்குவரத்து மறறும் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. அப்போது திடீரென 2 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் தாயம்மாளை சுற்றி வளைத்து ஓட ஓட அரிவாளால் வெட்டினர்.
கழுத்தில் சரமாரியாக வெட்டு விழுந்ததால் அவர் அலறியபடியே சரிந்து விழுந்தார். இதையடுத்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த பயங்கர கொலைச் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதியில பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை டவுன் போலீசார், உதவி கமிஷனர் கந்தசாமி தலைமையில் விரைந்து வந்தனர். அவர்கள் தாயம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட தாயம்மாளுக்கு மகன் வெங்கடேஷ், மகள் முத்துலெட்சுமி ஆகியோர் உள்ளனர். இந்த கொலை கொடுக்கல், வாங்கலில் நடத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்தை தகராறில் நெல்லை அருகே 2 பெண்கள் அடுத்தடுத்து வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.