நியூட்ரினோ ஆய்வு மையம்: வைகோ வழக்கு பிப்.23ஆம் தேதி ஒத்திவைப்பு
மதுரை: தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த மனு மீதான விசாரணை பிப்ரவரி 23ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு, நீதிபதிகள் டி. மதிவாணன், வி.எஸ். ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ ஆஜராகி வாதிட்டார்.

நியூட்ரினோ ஆய்வகத்துக்காக தோண்டப்படும் சுரங்கம், அதில் பயன்படுத்தப்படும் வெடிபொருள்களால் முல்லைப் பெரியாறு, கேரளம் மாநிலத்தின் இடுக்கி அணை உள்ளிட்ட 12 அணைகள் உடையும் ஆபத்து உள்ளன. வெடிபொருள்கள், கதிர்வீச்சு காரணமாக நிலத்தடி நீர் திசைமாறுவதோடு, அதில் நச்சு கலக்கும் ஆபத்தும் உள்ளது. இதனால் பல மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் அழிந்துபோகும் என அஞ்சுகிறோம். எனவே இத்திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
இத்திட்டத்துக்கு கேரளம் அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு வைகோ இல்லை என்றார். மனுவுக்கு மத்திய, மாநில அரசுகளின் பதில் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, பதில் அளித்த மத்திய அரசு வழக்கறிஞர், பதிலைப் பெறுவதற்கு கால அவகாசம் கோரினார். தமிழக அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், நிபந்தனைகளின் பேரில், இத்திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதையடுத்து மனுவுக்கு மத்திய, தமிழக சுற்றுச்சூழல், வனத்துறை செயலர்கள், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறைச் செயலர், அணுசக்தி துறைத் தலைவர் ஆகியோர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனு மீதான விசாரணை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசின் பதில் மனுவை படித்து பார்க்க அவகாசம் கோரினார் வைகோ. வைகோ கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணை பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications