பாஜக தலைமையில் புதிய கூட்டணி- திமுக, அதிமுகவுக்கு இடம் கிடையாது: இல. கணேசன்
இல்லம்தோறும் மோடி உள்ளம் தோறும் தாமரை என்ற வாசகத்துடன் கூடிய கிராம யாத்திரை பாஜக சார்பில் நடத்தப்பட்டது. சென்னை மேடவாக்கத்தில் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கடந்த 1ம் தேதி யாத்திரையை துவக்கினார். இந்நிலையில் நேற்று யாத்திரையின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது நடந்த பொதுக் கூட்டத்தில் இல. கணேசன் பேசுகையில்,
தமிழகத்தில் திமுக, அதிமுக இல்லாத புதிய கூட்டணியை பாஜக தலைமையில் உருவாக்க நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இந்த புதிய கூட்டணியில் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சேர்கின்றன. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது, ஊழல் மலிந்து கிடக்கிறது. பாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடி தான் முதல்வராக உள்ள குஜராத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். நதிகளை இணைத்து விவசாயத்தில் வளர்ச்சி காண பெரிதும் உறுதுணையாக இருக்கிறார். மோடி பிரதமர் ஆனதும் போடும் முதல் கையெழுத்து சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வருவதற்காகத் தான் இருக்கும்.
காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று கருணாநிதி தெரிவித்திருப்பது திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே உள்ள பூசலின் வெளிப்பாடு. அவர் கூறிய விஷயங்கள் எல்லாம் பிற கட்சிகளுக்காகவோ அல்லது பாஜகவுக்காகவோ கூறிய கருத்தாக நான் கருதவில்லை. இது காங்கிரஸ் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்த விடுக்கப்பட்ட விஷயம் என்று தான் நான் நினைக்கிறேன். திமுக தனது நிலைப்பாட்டை எந்நேரத்திலும் மாற்றும் என்று நினைக்கிறேன். அதனால் அவசரப்பட்டு நான் எந்த முடிவையும் எடுக்க விரும்பவில்லை என்றார்.