காவிரியில் புதிய கால்வாய்.. கர்நாடகத்தின் அட்டூழியத்தால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிவு
காவிரியில் புதிய கால்வாயை கர்நாடக அரசு கட்டி வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் நீர் வரத்து குறைந்துள்ளது.
மேட்டூர்: காவிரியின் குறுக்கே மணல் தடுப்பை அமைத்து கர்நாடகம் புதிய கால்வாய் அமைத்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சரிந்து வருகிறது.
ஒக்கேனக்கல் அருகில் உள்ளது அடிப்பாலாறு. இந்த இடத்தில் மணல் தடுப்பை அமைத்து கால்வாய் அமைக்கும் பணிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்திற்கு வரும் நீரை கர்நாடகத்திற்கு திசை திருப்பி வருகிறது அம்மாநில அரசு.
கர்நாடகத்தில் உள்ள மாதேஸ்வரம் மலைக்கோயிலில் இன்னும் 2 வாரங்களில் திருவிழா நடக்க உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள நீர்வீழ்ச்சி மற்றும் குளங்கள் வற்றி போயுள்ளது. கர்நாடக அரசு கட்டி வரும் கால்வாய் மூலம் இந்தக் கோயிலுக்கு நீர் கொண்டு செல்லும் நடவடிக்கையில் கர்நாடகம் இறங்கியுள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்த நீரின் அளவு படிப்படியாக சரிந்து 50 கன அடிக்கு கீழே சென்றுவிட்டது. இதனால் தமிழகத்திற்கு தலைவலி அதிகரித்துள்ளது.