போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிரடி.. நெல்லையில் புதிய ஆம்னி பஸ் நிலையம்?
நெல்லை: நெல்லை சந்திப்பில் (ஜங்ஷன்) போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய ஆம்னி பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை கலெக்டர் கூட்ட அரங்கில் புதிய ஆம்னி பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: நெல்லை சந்திப்பு பஸ் ஸ்டாண்டில் தற்போது ஆம்னி பேரூந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தால் இப்பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது.
வெளியூர் பயணிகளும் புதிய பேரூந்து நிலையம் வந்து அங்கிருந்து சந்திப்பு பேரூந்து நிலையம் வருவதில் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இதனால் புதிய பேரூந்து நிலையம் அருகில் பிக் பஜார் எதிரில் சிறை மீண்டோர் நல வாழ்வு சங்கத்திற்கு சொந்தமான நிலத்தி்ல் குத்தகை அடிப்படையில் நெல்லை மாநகராட்சி மூலம் ஆம்னி பேரூந்து நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பேரூந்து நிலையம் பொதுமக்கள் வந்து செல்ல வசதியாகவும், நகர்ப்புறங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் செயல்படும். இந்த பேரூந்து நிலையத்தில் கான்கீரிட் தளம், பயணிகளுக்கு தேவையான குடிநீர் கழிப்பிட வசதி, மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதகிகளும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு வணிக அடிப்படையில் கடைகளும் கட்டி தரப்படும். தேவைக்கேற்ப பல்வேறு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.