குடிநீர் தட்டுப்பாடா ? ஹெல்ப்லைனில் அழைத்தால் தண்ணீர் லாரி வரும்.. சென்னை குடிநீர் வாரியம் ஏற்பாடு
பொதுமக்கள் அழைக்கும் இடங்களில் குடிநீர் விநியோகம் செய்ய சென்னை குடிநீர் வாரியம் ஏற்பாடுகளை செய்துள்ளது
சென்னை: குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க பொதுமக்கள் அழைக்கும் இடங்களில் குடிநீர் விநியோகம் செய்ய சென்னை குடிநீர் வாரியம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஹெல்ப்லைன்கள் தரப்பட்டுள்ளன.
வர்தா புயல் கடந்த திங்கட்கிழமை சென்னை அருகே கரையைக் கடந்தது. வர்தா புயலால் சென்னை நகரமே சின்னாபின்னமாக உருக்குலைந்து காணப்படுகிறது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து சேதமடைந்தன. மின்கம்பங்கள் மீது விழுந்த மரங்களால் நகரின் பல பகுதிகளில் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
வர்தா புயல் பாதிப்பால் தொடர் மின் தடை செய்யப்பட்டுள்ளதால் வடசென்னை முழுவதும் கடந்த 3 நாட்களாக குழாய்களில் குடிநீர் வரவில்லை. இதனால் மக்கள், காலி குடங்களுடன் தெரு தெருவாக அலைந்து செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது. ஒருசில இடங்களில் லாரிகளில் குடிநீர் வழங்கப்பட்டது. ஆனால், அதுவும் போதுமானதாக இல்லாததால் பலர் குடிநீர் கிடைக்காமல் தவித்தனர்.
இந்தநிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க பொதுமக்கள் அழைக்கும் இடங்களில் குடிநீர் விநியோகம் செய்ய சென்னை குடிநீர் வாரியம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகரில் வர்தா புயல் சேதங்களைக் கருத்தில்கொண்டு, பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, தொலைபேசி மூலமாக குடிநீர் வழங்கக் கோரி அழைத்தால், குடிநீர் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை குடிநீர் வாரியம் செய்துள்ளது.
அதற்காக குடிநீர் லாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் நிரப்பும் நிலையத்தின் வேலை நேரமும், லாரியின் மூலம் விநியோகிக்கும் நடைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கீழ்கண்ட எண்களுக்கு தொடர்புகொண்டு, தேவைக்கு ஏற்ப, 9 ஆயிரம் மற்றும் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளை வரவழைத்து குடிநீரை பெற்றுக்கொள்ளலாம்.
மண்டல வாரியாக தொடர்புகொள்ளும் எண்கள்:
- திருவொற்றியூர் மண்டலம்: 044-25991908
- மணலி மண்டலம்: 044-25553090
- மாதவரம் மண்டலம்: 044-25530100
- தண்டையார்பேட்டை மண்டலம்: 044-25920609,
- இராயபுரம் மண்டலம்: 044-25902651
- திரு.வி.க. நகர்: 044-26505435
- அம்பத்தூர் மண்டலம்: 044-26530929
- அண்ணா நகர் மண்டலம்: 044-26441679
- தேனாம்பேட்டை மண்டலம்: 044-28341448
- கோடம்பாக்கம் மண்டலம்: 044-28153803
- வளசரவாக்கம் மண்டலம்: 044-24866419
- ஆலந்தூர் மண்டலம்: 044-22241315
- அடையார் மண்டலம்: 044-22351145
- பெருங்குடி மண்டலம்: 044-22584288
- சோழிங்கநல்லூர் மண்டலம்: 044-24501695