உறவினர் போல நடித்து பிறந்த குழந்தை கடத்தல்: பெண்ணுக்கு வலைவீச்சு
நெல்லை: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியை சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மனைவி சரோஜா. இவர் இரண்டாவது மனைவி என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் சரோஜா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான அவர் பிரவசத்திற்காக கடந்த 8ம் தேதி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 9ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
தாயும், சேயும் பிரவச வார்டு மாடியில் உள்ள குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை பிரிவில் இருந்தனர். சரோஜாவுடன் அவரது உறவினர் என்ற பெயரில் ஜெயலட்சுமி என்பவர் தங்கியுள்ளார். சரோஜாவுக்கு பல்வேறு உதவிகளையும் செய்துள்ளார்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று கூறி குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார். பல மணி நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் சோதனை செய்ததில், குழந்தை கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். குழந்தைகள் வார்டில் இருக்கும் 4 சிசிடிவி கேமாராக்களில் ஜெயலட்சுமி குழந்தையை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இவற்றை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
நெல்லை ஐகிரவுண்ட் மருத்துவமனையில் அடிக்கடி குழந்தை திருட்டு நடப்பதால் இதை தடுக்க தனியார் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 24 மணி நேரமும் இவர்கள் பணியில் இருக்கின்றனர். வார்டுகளில் வெளிநபர்கள் யாரையும் அனுமதிப்பது இல்லை. குழந்தைகள் வார்டுக்கு வருபவர்கள் சோதனை செய்யப்படுகின்றனர். அதையும் மீறி குழந்தை கடத்தல் சம்பவம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் குழந்தைகள் வார்டில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.