தலைவர், பொதுச் செயலாளர் தேர்தல் எதிரொலி.. சென்னையில் குவியும் திமுக மா.செக்கள்!
சென்னை: திமுக தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளுக்கு வருகிற 7ம் தேதி மனுத்தாக்கல் நடைபெறவுள்ளதால் மாவட்டச் செயலாளர்கள் சென்னையில் குவியத் தொடங்கியுள்ளனர்.
திமுகவின் 65 மாவட்டங்களுக்கு சமீபத்தில் புதிய செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் பலர் போட்டியின் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். பலர் கட்சி மேலிடத் தலையீட்டின் பேரில் சமரசங்களுக்குப் பின்னர் ஒருமனதாக நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளுக்கு வருகிற 7ம் தேதி மனுத்தாக்கல் செய்யலாம் என்று கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. இதில் தலைவர் பதவிக்கு கருணாநிதியும், பொதுச் செயலாளர் பதவிக்கு அன்பழகனும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். அவர்களது பெயர்களை தலா ஐந்து மாவட்டச் செயலாலறக்ள் முன்மொழிவார்கள், ஐந்து பேர் வழிமொழிவார்கள்.
இந்த நிலையில்தான் பொதுச் செயலாளர் பதவி தனக்கு வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பிரச்சினை கிளப்பியதாக செய்திகள் வெளியாகின. இதை திமுக தலைவர் கருணாநிதி ஏற்கவில்லை என்றும் முடிந்தால் போட்டியிட்டு வென்று வா என்று கூறி விட்டதாகவும் சொல்கிறார்கள். இதனால் ஏற்பட்ட அதிருப்தியால்தான் தனது பொருளாளர், இளைஞர் அணிச் செயலாளர் பதவிகளை ஸ்டாலின் ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும் தகவல்கள் பரவின.
ஆனால் எல்லாவற்றையும் ஸ்டாலின் மறுத்து விட்டார். இந்த நிலையில் தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்கள், தலைவர், பொதுச் செயலாளர் தேர்தலையொட்டி சென்னையில் குவியத் தொடங்கியுள்ளனர். ஸ்டாலின் பரபரப்புக்கு மத்தியில் இவர்கள் வந்து குவிவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறுபக்கம் திமுகவிலிருந்து நீக்கப்பட்டவரான மு.க.அழகிரியும் சென்னைக்கு இன்று வந்து முகாமிட்டுள்ளார். இதனால் பரபரப்பு கூடியுள்ளது.
7ம் தேதி என்ன நடக்குமோ... !












Click it and Unblock the Notifications